சூப்பர்.. ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை.. பிரதமர் நரேந்திர மோடியிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு..
ஜகார்த்தா: இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ இன்று வழங்கினார். இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா உள்பட உலக நாடுகளை வழிநடத்தும் தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாறியுள்ளார்.
உலக நாடுகள் தங்களின் வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்களுக்காக பிற நாடுகளுடன் கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன.
அந்த வகையில் உள்ள ஒரு கூட்டமைப்பு தான் ஜி20 கூட்டமைப்பு. இதில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என மொத்தம் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
250 வழக்குகளில் துப்பு துலக்கிய 'சிம்பா’ மரணம்.. வீரவணக்கம் செலுத்திய சக மோப்ப நாய்கள்.. நெகிழ்ச்சி!
ஜி20 நாடுகள் எவை?
ஜி20 கூட்டமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்கள் பற்றி பேச துவங்கப்பட்ட இந்த அமைப்பு காலநிலை மாற்றம், எரிசக்தி துறை, நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றியும் விவாதிக்கும்.
சுழற்சி அடிப்படையில் தலைமை
மேலும் இருநாடுகள் இடையேயான உறவுகள் பற்றியும் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்காக ஆண்டுதோறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டுக்கு தலைமை பொறுப்பு என்பது ஒவ்வொரு நாடுகளுக்கும் சுழற்சி அடிப்படையில் வழங்கப்படும். தற்போது இந்தோனேசியா தலைமை பொறுப்பு ஏற்று செயல்பட்டு வந்தது.
இந்தோனேசியாவில் 2 நாள் மாநாடு
அதன்படி ஜி20 உச்சிமாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் நேற்று துவங்கி இன்று வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்வில்லை. மாறாக அவரது அமைச்சர் பங்கேற்று இருந்தார்.
தலைவர்கள் பங்கேற்பு
இந்த மாநாட்டில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். மேலும் நாட்டில் நிலவும் பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் புதுப்பிக்கத்தக்க கூடிய ஆற்றல் வளங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாடு இன்று முடிவடைந்தது.
இந்தியாவிடம் தலைமை பொறுப்பு
இந்நிலையில் தான் ஜி20 மாநாட்டின் 2வது நாளான இன்று ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த பொறுப்பை இந்தோனேசியாவிடம் இருந்தது. இதனால் தான் இந்தோனேசியாவில் 2 நாள் ஜி20 மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாடு முடிந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமை பொறுப்பை இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ வழங்கினார்.
டிசம்பர் 1ல் அதிகாரப்பூர்வ தலைமை
அதன்படி தற்போது பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டாலும் கூட ஜி20 தலைமைத்துவ பொறுப்பை இந்தியா டிசம்பர் 1ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. அதன்பிறகு அடுத்த ஆண்டு தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி விட்டது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஜி20 கூட்டமைப்புக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில் அதற்கான லோகோ, கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனையை தான் ஜி20 இலச்சின பிரதிபலிக்கிறது என அவர் தெரிவித்தார். இருப்பினும் அதில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை வடிவம் இடம்பெற்றிருந்தது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.