40 அடி ஆழ்குழாயில் விழுந்த 2 வயது சீனச் சிறுவன் ஆப்பிள் ஐபோன் உதவியுடன் மீட்பு
சீனாவில் யுன்னான் மாகாணத்தில் மெங்ஷி நகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வயலில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
சிறுவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், ஆழ்குழாய் கிணற்றுக்குள் மிக நீளமான கயிற்றை இறக்கி அதை பிடித்து கொள்ளும்படி சிறுவனுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதற்குள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புபடை மற்றும் போலீசார் ஆழ்குழாய்க்குள் சிறுவன் சிக்கியிருக்கும் இடத்தையும், அவனின் நிலைமையை அறியவும் முடிவு செய்தனர்.
நீளமாக கயிறு ஒன்றில் அதிநவீன ஆப்பிள் ஐபோன் செல்போனில் காமிராவை ஆன் செய்து உள்ளே இறக்கியுள்ளனர். இதில் சிறுவன் சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக, ஆழ்குழாய்க்குள் சிறுவன் மூச்சு திணறாமல் இருக்க ஆக்சிஜன் சிலிண்டரும், இருட்டில் பயப்படாமல் இருக்க டார்ச் விளக்குகளும் அடிக்கப்பட்டன.
அதை தொடர்ந்து குதிரைக்கு இடப்படும் சேணம் போன்று அமைத்து அதை சிறுவன் சிக்கியிருந்த தூரம் வரை பலமான கயிற்று மூலம் இறக்கினர். அதன் மூலம் சிறுவனை உயிருடன் பத்திரமாக மீட்கப் பட்டான். லேசான சிராய்ப்புகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அச்சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.