விடிய, விடிய பேச்சு.. அணுசக்தி விவகாரத்தில் ஈரான்- மேலைநாடுகள் உடன்பாடு! 12 வருட இழுபறி தகர்ப்பு
லவுசனே (சுவிட்சர்லாந்து): அணு ஆயுத தயாரிப்புக்கு அணுசக்தியை பயன்படுத்த மாட்டோம் என்று ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் நெருக்கடிக்கு பலன் கிடைத்துள்ளது. பல நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்த பேச்சுவார்த்தை இழுபறி விடியவிடிய நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு பலனை பெற்றுள்ளது. இதையடுத்து விரைவிலேயே, ஈரான் மீதான பொருளாதார தடையை மேலை நாடுகள் விலக்கிக் கொள்ளும் என்று தெரிகிறது.
தடையை விலக்க முடிவு
இதையடுத்து, அந்நாட்டின் மீதான தடையை நீக்கவும், அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்வது எனவும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் முடிவெடுத்தது.
தடையை விலக்க முடிவு
இதையடுத்து, அந்நாட்டின் மீதான தடையை நீக்கவும், அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்வது எனவும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் முடிவெடுத்தது.
பேச்சுவார்த்தை
தடையை விலக்க வசதியாக, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. சுவிட்சர்லாந்து நாட்டின் லவுசனே நகரில் வைத்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகளும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஷெரிப் தலைமையிலான குழுவும், இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.
விடியவிடிய பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையில் சில ஷரத்துகளில் ஈரான் பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் கடைசி கட்ட இழுபறி நீடித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் முகமது ஜவாத் இருவரும், நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி, விடியவிடிய மாரத்தான் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாலையில், ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். இதன்படி, வல்லரசு நாடுகள் வலியுறுத்திய, ஷரத்துகளை ஏற்க ஈரான் சம்மதித்துள்ளது.
இந்த புரிந்துணர்வுபடி ஈரான் செய்ய வேண்டியவை:
*அணு ஆயுதம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் 3ல் இரு பங்கை ஈரான் அகற்ற வேண்டும். இந்த நடவடிக்கையை அடுத்த பத்தாண்டுகாலமாக மேற்பார்வை செய்ய பார்வையாளர்களை ஈரான் அனுமதிக்க வேண்டும்.
*யுரேனியத்தை, ஆயுத தயாரிப்பு அளவுக்கு தரமானதாக மாற்ற பயன்படுத்தப்படும் centrifuges எனப்படும் கருவியை, 19 ஆயிரத்தில் இருந்து 6ஆயிரமாக குறைக்க வேண்டும். அந்த 6 ஆயிரம் கருவிகளில், ஐந்தாயிரம் கருவிகளை, யுரேனியத்தை 3.67 சதவீதத்துக்கும் மிகாமல் செழுமைப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில், அதற்குமேற்பட்ட சதவீதத்தில் யுரேனியத்தை செழுமை செய்தால், அது அணு ஆயுதத்திற்கு பயன்படுத்தப்பட்டுவிடும். இந்த நடைமுறை குறைந்தபட்சம் 15 வருடங்களுக்கு இருக்க வேண்டும்.
*ஈரானில் தற்போதுள்ள செழுமைப்படுத்தப்பட்ட யுரேனியம், வெளிநாடுகளுக்கு பகிர்ந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அல்லது, செழுமையை குறைக்க வேண்டும்.
*அணு ஆயுத பகுதியை, சர்வதேச அணு ஆயுத ஏஜென்சியினர் சோதனை நடத்திக்கொள்ள ஈரான் அனுமதிக்க வேண்டும்.
ஒபாமா மகிழ்ச்சி
ஈரான் மற்றும் வல்லரசு நாடுகள் நடுவே ஏற்பட்டுள்ள உடன்பாட்டுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்பு தெரிவித்துள்ளார். "இது ஒரு நல்ல முடிவு. இதன் மூலம் உலகம் அமைதியடையும்" என்று ஒபாமா கூறியுள்ளார். மற்றொரு மத்திய கிழக்கு போரை இந்த உடன்பாடு தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரானை ஒடுக்க மூன்று வழி
ஒபாமா மேலும் கூறுகையில், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த 3 வழிகள் உள்ளன. ஒன்று அமைதியான முறையில், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது, அடுத்தது, ஈரானின் அணு ஆயுத மையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசுவது, 3வது வழி, மேலும் பல நாடுகளுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து, அது வழிக்கு வருமா என்று பார்ப்பது. இம்மூன்றில் நான் மிகவும் நேசித்தது, பேச்சுவார்த்தை மூலமான தீர்வைத்தான். அது நடந்துள்ளது, என்று ஒபாமா கூறியுள்ளார்.
பொருளாதார தடை விலகும்
பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஜூன் மாத இறுதியில் இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இதையடுத்து, ஈரான் மீதான பொருளாதார தடையும் விலக்கி கொள்ளப்படும் என தெரிகிறது.
ஈரான் மக்கள் கொண்டாட்டம்
இதனிடையே, 12 ஆண்டுகாலமாக நீடித்துவந்த அணு ஆயுத பிரச்சினை, ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதையும், மேலைநாடுகளுடன், ஈரான் சுமுக உறவை ஆரம்பிக்க உள்ளதையும், ஈரானிய மக்கள் ஆட்டம், பாட்டத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்றிரவு முழுக்க, ஈரானின் பல பகுதிகளிலும் கொண்டாட்டம் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் அதிருப்தி
அதேநேரம், இஸ்ரேல் இந்த பேச்சுவார்த்தை முன்னேற்றத்தை ஆபத்தானதாக பார்க்கிறது. இதுகுறித்து 'டைம்ஸ் ஆப் இஸ்ரேல்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், "இந்த உடன்பாடு, இறுதி செய்யப்பட்டால், ஈரானுக்கு, சர்வாதிகார பலம் கிடைக்கும். இது உலகத்திற்கு மேலும் ஆபத்தானது" என்று உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.