ரியாத்தில் நடந்த இந்திய சமூகப் பேரவையின் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ரியாத்: ரியாத்தில் இந்திய சமூகப் பேரவை சார்பில் 66வது குடியரசு தின விழா கடந்த 26ம் தேதி கொண்டாடப்பட்டது. விழாவில் இந்தியாவின் மூன்று தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முதலில் பள்ளி மாணவர்கள் சைஃப், ஷிஹாம், அமீன் யஹ்யா, தர்வீஷ் ஆகியோர் ஒற்றுமை கீதம் இசைத்தனர். இந்திய சமூகப் பேரவை (ISF) மத்திய குழுவின் நற்பணிகள் ஒருங்கிணைப்பாளர் முனீர் பழூர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்திய சமூகப் பேரவை மத்திய குழுவின் தலைவர் கோயா ஃபெரோக் தனது தலைமையுரையில் இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளைக் காக்க வேண்டியதன் தேவைகளையும், அவற்றுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளையும் தன் உரையில் பட்டியலிட்டார்.
அமைப்பின் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் பஷீர் இங்கப்புழா மலையாளத்தில் ஃபாஸிசத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
இந்திய சமூகப் பேரவை ரியாத் (ISF) மத்திய குழு பொதுச் செயலாளர் ரம்ஸுத்தீன் நாட்டு விடுதலைக்குப் போராடியவர்கள் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருவதன் அவலத்தைச் சுட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அமைப்பின் கன்னட குழுவின் பொறுப்பாளர் அம்ஜத் ஷிமோகா இந்திய மக்களிடையே தேசத்துரோகிகளுக்குக் கட்டமைக்கப்படும் ஆதரவு குறித்த கவலையைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தியன் ஃப்ரட்டர்னிட்டி ஃபோரத்தின் தலைவர் மெளலவி சலீம் அல் காசிமி வாழ்த்துரை வழங்குகையில், தேச அரசியலில் ஏற்பட்டுள்ள (ஏ)மாற்றங்களைச் சுட்டிக் காட்டினார். இறுதியாக வாழ்த்துரை வழங்கிய ஊடகவியலாளரும், கவிஞருமான பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன், நாட்டைப் பிடித்துள்ள கேட்டை, வறுமையை, வல்லாதிக்கத்தை அகற்ற கல்வியும் ஊடக விழிப்புணர்வும் இரு கண்களாகக் கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அமைப்பின் தமிழகப் பிரிவு தலைவர் ஃபைஸல் ரஹ்மான் நன்றி நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.