‘பொம்மை’ என எழுதப்பட்டு வந்த பார்சலில் இளம்பெண் பிணம்... ஜப்பானில் பயங்கரம்
டோக்கியோ: ஜப்பானில் பொம்மை என குறிக்கப்பட்டு வந்த ஒரு பார்சலில் இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் ஒசாகா சிட்டியைச் சேர்ந்தவர் ரிக்கா ஒகாடா. நர்சாக பணி புரிந்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் திடீரென மாயமானார். ஆனால், மாயமாவதற்கு முன்னதாக தனது பால்ய சினேகிதி ஒருவரைச் சந்திக்க இருப்பதாக பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார் ரிக்கா. ஆனால், அதற்குப் பின்னர் அவர் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் சுமார் 6 அடி 6 அங்குலத்தில் பார்சல் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதன் மேலே ‘பொம்மை' என எழுதப்பட்டிருந்தது. அப்பார்சல் ஒசாகாவின் தென்பகுதியில் இருந்து அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், அனுப்பியவர்கள் குறித்த விபரமில்லை.
அந்தப் பார்சல் ரிக்காவின் பெயரில், அவரது முகவரிக்கு அனுப்பபட்டிருந்தது. அதன் கட்டணத்தையும் ரிக்காவின் கிரெடிட் கார்டிலிருந்தே எடுத்துள்ளனர். சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவைப் பயணம் செய்து வந்த அந்த பார்சல் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்ததால், போலீஸார் அதைப் பிரித்துப் பார்த்தனர்.
பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலின் உள்ளே ரிக்காவின் சடலம் இருந்தது. ரிக்காவின் உடலில் எண்ணிலடங்கா கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரிக்காவைக் கொலை செய்தது அவரது பள்ளித் தோழி தான் என்றும், கொலையாளி ரிக்காவின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இம்மாத துவக்கத்தில் வெளிநாடு சென்று விட்டதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பான தெளிவான விவரங்களை வெளியிட ஒசாகா போலீசார் மறுத்து விட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.