பனாமா பேப்பர்ஸ் மூலமாக மால்டா பிரதமரின் ஊழல்களை அம்பலப்படுத்திய பெண் பத்திரிகையாளர் படுகொலை
பனாமா பேப்பர்ஸ் மூலம் மால்டா பிரதமரும் அவருடைய நெருங்கிய சகாக்களும் செய்த ஊழல்களை வெளியே கொண்டு வந்த பத்திரிகையாளர் கலிசியா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
வலேட்டா: பனாமா பேப்பர்ஸ் மூலம் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட்டின் ஊழல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கலிசியா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மால்டாவைச் சேர்ந்தவர் டேப்னி கருவானா கலிசியா (53). பத்திரிகையாளரான இவர் ஒன் வுமன் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார்.
இந்த வலைதளத்தில் கலிசியா எழுதிய கட்டுரைகள் மக்களால் ஈர்க்கப்பட்டன. அவர் வீட்டிலிருந்து வடக்கு மால்டாவில் பிட்னிஜா என்ற கிராமத்துக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார்.

காருடன் தூக்கி வீசப்பட்டார்
அப்போது அவர் மீது மர்மநபர்கள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வீசினர். இதில் காருடன் தூக்கி வீசப்பட்ட கலிசியா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஊழல் விவரங்கள்
2015-ல் பனாமாவின் மொசாக் ஃபென்செக்கா நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனி ஊடகம் ஒன்றில் வெளியானது. பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து குவிக்க உதவிய நிறுவனம்தான் மொசாக் ஃபென்செக்கா. இதன் ஆவணங்களை ஆராய இந்தியா உட்பட 107 நாடுகளின் செய்தியாளர்களின் கூட்டமைப்பு களமிறங்கியது. இதில் ஒருவராக இருந்தவர்தான் டேப்னி கருவானா கலிசியா. இந்த ஆவணங்கள்தான் பனாமா பேப்பர்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

சதியாக இருக்கலாம்
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தால்தான் அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிபோனது. ரஷ்ய அதிபர் புதின், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிக் கேம்ரன் என பல பெரும் தலைகள் பனாமா பேப்பர்ஸில் சிக்கின. இந்நிலையில் மால்டா பிரதமர் ஜோசப்பின் தில்லு முல்லுகளை வெளிச்சம் போட்டு காட்டிய காரணத்தால் கலிசியா கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காட்டுமிராண்டித்தனம்
இதுகுறித்து மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் கூறுகையில் அரசியல் ரீதியிலும், தனிப்பட்ட முறையிலும் இந்த காட்டுமிராண்டித்தனத்தை யாராலும் நியாயப்படுத்த முடியாது. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications