செவ்வாயில் தண்ணீர்... "பியூரிபயரை" நம்பி மனிதர்கள் குடியேறலாம் பாஸ்!
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் கோடையில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம், அங்கு உயிர்கள் வாழ்வது சாத்தியப்படலாம் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்குள் பிறந்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நேற்று செய்தியாளர்கள் மத்தியில் செவ்வாய் கிரகத்தில் கோடைக்காலத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இது மார்ஸ் ரீகனயஸன்ஸ் ஆர்பிட்டர் (எம்.ஆர்.ஓ) மூலம் கிடைத்துள்ள தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
குடியேற்றம்...
விண்வெளி அதிலுள்ள மற்ற கிரகங்கள் குறித்த ஆய்வு சர்வதேச அளவில் நடந்து வருகின்றன. ஏறக்குறைய பூமியை ஒத்துள்ள செவ்வாய்கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
செவ்வாயில் தண்ணீர்...
செவ்வாயில் தண்ணீர் இருந்தால் அங்கு மனிதர்கள் வாழ்வது சாத்தியமாகலாம் என இவ்வளவு நாள் வரை விஞ்ஞான உலகம் கூறி வந்தது. இதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
நாசா உறுதி...
இந்நிலையில், செவ்வாயில் உள்ள மலைப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், தரைப்பரப்பிலும் தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது. இந்தத் தண்ணீர் குளிர்காலத்தில் உறைந்து போயும், வெயில் காலத்தில் திரவ நிலைக்கு மாறியும் ஓடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வேற்றுகிரகவாசிகள்...
இதன் மூலம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனவே, அங்கு வேற்றுகிரகவாசிகளோ அல்லது உயிரினங்களோ இருக்கலாம், இனி வரும் ஆய்வுகளில் இது போன்ற தகவலும் கண்டுபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
செவ்வாயில் நண்டு...
ஏற்கனவே, நாசா வெளியிடும் புகைப்படங்களில் தோன்றும் உருவங்களை மனிதர்களாக, நண்டு, பல்லி உள்ளிட்ட உயிரினங்களாக வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
நம்பிக்கை...
இந்த நேரத்தில் செவ்வாயில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் அங்கு உயிரினங்கள் வாழலாம் என நம்பிக்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சாத்தியக்கூறுகள்...
இது தவிர, பூமியில் இருந்து செவ்வாய் சென்று மனிதர்களைக் குடியேற்றவும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே, சிலர் செவ்வாயில் சில இடங்களை பட்டா செய்ய ஆரம்பித்துவிட்ட கூத்தும் நடந்துள்ளது. இவர்களுக்கெல்லாம் செவ்வாயில் தண்ணீர் கிடைத்த தகவல் அமுதமாகியுள்ளது.
உப்புத் தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை. பியூரிபயரை நம்பி குடியேறலாம்...!