பிரிட்டனில் இருந்து பார்சலில் வந்த 1000 உயிருள்ள எறும்புகள்... ஷாக்கான சீன சுங்க அதிகாரிகள்!
பெய்ஜிங்: பிரிட்டனில் இருந்து பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரம் உயிருள்ள எறும்புகளை சீன சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சீனாவில் மின்னணு வர்த்தகம் அதிகரித்துள்ள நிலையில், செல்லப்பிராணிகள், பாம்புகள், பூச்சிகள் போன்ற விஷ உயிர்களும் பார்சல்கள் வழியே அனுப்பப்படுகின்றன. ஆனால் இவை சட்டவிரோதமான கடத்தல் என்பதால், சீன சுங்க அதிகாரிகள் விழிப்புடன் ஒவ்வொரு பார்சலையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அவற்றை உரியவர்களிடம் அளிக்கின்றனர்.
இந்நிலையில், ஹூனான் மாகாணத்தில் பிரிட்டனில் இருந்து வந்த பார்சல் ஒன்றின் மீது சீன சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பார்சலை அவர்கள் சோதனை செய்து பார்த்ததில், அதில் 1000 எறும்புகள் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கட்டெறும்புகள்:
சோதனைக் குழாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த எறும்புகள் 1.4 செமீ நீளத்தில் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்துள்ளன. உடனடியாக அந்தப் பார்சலை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அளித்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பார்சலில் கடத்தி வரப்பட்டவை கட்டெறும்பு வகையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

செல்லப்பிராணிகளுக்கு உணவு:
சீனாவில் தற்போது செல்லப்பிராணிகளுக்கு உயிருள்ள எறும்புகளை உணவாகக் கொடுப்பது வழக்கமாகி வருகிறது. இந்த எறும்புகளையும் அதற்காகவே கடத்தி வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுவும் காரணம்:
அதோடு, கட்டெறும்புகள் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தில் இருப்பதாலும், அதி விரைவாக தங்களது இனைத்தைப் பெருக்கிக் கொள்ளும் திறன் பெற்றிருப்பதாலும் அவற்றை சீனர்கள் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. இதனால் அவற்றை மர்மநபர்கள் சட்டவிரோதமாக கடத்தி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சட்டவிரோதம்:
ஆனால், சீனாவில் பார்சல் மூலமாக உயிருள்ள விலங்குகளை அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் விலங்குகளால் தங்களது நாட்டிற்கு தீங்கு ஏற்படலாம் என அந்நாடு கருதுகிறது. இதனால், எறும்புகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் அனுப்பிவர்கள் குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications