பள்ளிகளில் “திருக்குறள்” பாடம் – வள்ளுவனுக்கு மலேசியாவில் கிடைத்த அங்கீகாரம்!
கோலாலம்பூர்: மலேசியாவின் பள்ளிகளில் திருக்குறளைப் பாடத்திட்டமாக சேர்க்க அந்நாட்டு கல்வித்துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் கல்வி பயிலும் இந்தியர்கள் முழு சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் உள்ளனர் என மலேசிய நாட்டின் கல்வித்துறை இணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்த கமலநாதன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், "தமிழ் தொன்மையான மொழி. அந்த மொழிக்கு மலேசிய அரசு உரிய மரியாதை வழங்கி வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் 254அரசு பள்ளிகளில் திருக்குறளை பாடத்திட்டமாக அமைக்க உள்ளோம்.
ஆரம்பப் பள்ளிகள் மட்டுமின்றி உயர்நிலைப் பள்ளிகள்மற்றும் இரண்டு பல்கலைக்கழகங்களில் திருக்குறளை பாடத்திட்டமாகச் சேர்க்க உள்ளோம். இந்தியா , மலேசியா நாடுகள் கலாசார அடிப்படையில் ஒன்றிணைந்து உள்ளன.
அங்கு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் பேர் பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் படித்து வருகின்றனர். உதவித்தொகை பெற்று மலேசியாவில் கல்வி கற்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வரும் கல்வியாண்டு முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மலேசியாவில் கல்வி பயிலும் இந்தியர்கள் முழு சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் உள்ளனர்" என்று தெரிவித்தனர்.