அதிபரை கொலை செய்ய சதி... மாலத்தீவு துணை அதிபர் அகமது ஆதீப் கைது!!
மாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூமை கொலை செய்ய சதி செய்ததாக அந்நாட்டு துணை அதிபர் அகமது ஆதீப் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் அண்மையில் செளதிக்கு குடும்பத்துடன் ஹஜ் யாத்திரை சென்றார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் மாலேவுக்கு சொகுசு படகு மூலம் திரும்பிக் கொண்டிருந்தார்.
மாலே துறைமுகத்துக்கு அந்த படகு வந்த போது திடீரென குண்டு வெடித்தது. இதில் அதிபர் யாமின் மனைவி மற்றும் 2 பேர் காயம் அடைந்தனர். அப்துல்லா யாமின் காயமின்றி மயிரிழையில் தப்பினார்.
இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே அதிபர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்காக ராணுவ அமைச்சர் ஜலீல் அண்மையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அதிபரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக அந்நாட்டின் துணை அதிபர் அகமது ஆதீப் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மாலே திரும்பிய அவர் விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அந்த நாட்டின் ராணுவ மந்திரி மூசா அலி ஜலீல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிபர் பாதுகாப்பில் நடந்த குளறுபடிக்கு பாதுகாப்பு மந்திரிதான் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.