டேக் ஆப்ஃபுக்கு முன்பு ஒரு விபரீதம்.. விமானத்தின் அவசரகால கதவைத் திறந்த பயணி!
பெய்ஜிங்: சீன விமானம் ஒன்று மேலே பறப்பதற்கு தயாராவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தின் அவசர கால கதவைத் திறந்து விட்டார் ஒரு சீனப் பயணி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷோ என்ற விமான நிலையத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அப்போது விமானம் மேலே எழும்பவில்லை என்பதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக அவசர கால கதவைத் திறந்ததாக அந்த பயணி பின்னர் கூறியுள்ளார். இதுகுறித்து ஜூஜியா நான்பெங்யூ என்ற சக பயணி சமூக வலைதளத்தில் எழுதியுள்ளதாவது:
ஜியாமென் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தபோது இது நடந்தது. விமானம் செங்க்டு நகருக்குக் கிளம்பத் தயாராகி வந்தது. அப்போது அப்போது 50 வயதுகளில் உள்ள ஒரு பயணி திடீரென அவசர கால கதவைத் திறந்து விட்டார். அதைப் பார்த்த விமான ஊழியர் அவசரமாக ஓடி வந்து அந்தக் கதவை மூடி விட்டார். இதனால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கதவைத் திறந்ததாக அந்த பயணி பின்னர் கூறினார். இருப்பினும் அந்தப் பயணியை இறக்கி விட்டு விட்டு விமானம் திட்டமி்டபடி தனது பயணத்தைத் தொடர்ந்துத என்று அவர் எழுதியுள்ளார். கூடவே அந்த நபரின் போட்டோவையும் இணைத்துள்ளார்.