மாயமான மலேசிய விமானம் நினைத்ததற்கு முன்பே தென் பக்கம் திரும்பியது
கான்பெர்ரா: கடந்த மார்ச் மாதம் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 நினைத்ததற்கு முன்பாகவே தெற்கு பக்கம் திரும்பியிருக்கக்கூடும் என்று புதிய தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. விமானம் சீனாவை அடையாமல் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.

விமானத்தை பல்வேறு நாடுகள் தேடி வருகின்றன. மாதக் கணக்கில் தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானம் முன்பு நினைத்ததை விட முன்கூட்டியே தெற்கு பக்கம் திரும்பியிருக்கக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தற்போது விமானத்தை தேடும் பகுதியில் இருந்து தெற்கே அதை தேட உள்ளனர். அடுத்த மாதம் முதல் கடலுக்கு அடியில் தேடும் பணி மேலும் ஆழமான பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கிடையே சில நிபுணர்கள் விமானம் தற்போது தேடப்படும் பகுதியில் அல்ல வேறு பகுதியில் விழுந்தது என்று கூறுகிறார்கள். இப்படி ஆளாளுக்கு ஒன்று கூறுவதால் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications