துபாய்க்கு தப்பிய முஷாரப்- "தலைமறைவு" என பாக். கோர்ட் பிரகடனம்- 30 நாளில் கைது செய்யவும் உத்தரவு!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஷ் முஷாரப் தேசதுரோக வழக்கில் ஆஜராகாததால் 'தலைமறைவாகிவிட்டதாக' பாகிஸ்தான் நீதிமன்றம் பிரகடனம் செய்துள்ளது. அவரை 30 நாட்களுக்குள் கைது செய்யவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். 2008-ல் பதவி விலகிய பின் துபாய்க்கு தப்பி ஓடினார். 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பிய முஷாரப்புக்கு எதிராக தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
ஆஜராக மறுப்பு
இதில் நீதிபதி மஷார் ஆலம் கான் மினாகெல் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக பல்வேறு சம்மன்கள் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.
துபாய் எஸ்கேப்
இதனிடையே வெளிநாடு செல்வதற்கு முஷாரப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் அண்மையில் விலக்கியது. இதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் புறப்பட்டு சென்றார்.
'தலைமறைவு' பிரகடனம்
இந்நிலையில் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வரும் முஷாரப்பை "தலைமறைவானவர்" என நீதிமன்றம் பிரகடனம் செய்தது. மேலும் 30 நாட்களுக்குள் முஷாரப்பை கைது செய்து ஆஜர்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சொத்து முடக்கம்?
அத்துடன் முஷாரப்பின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்யவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் முஷாரப்பின் சொத்துகளை முடக்கி அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சிறப்பு நீதிமன்றம் தீவிரப்படுத்தக் கூடும் என தெரிகிறது.