பாக்.: முஷாரப் வாகனம் சென்ற பாதையில் பயங்கர குண்டுவெடிப்பு- காயமின்றி உயிர் தப்பினார்!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலின் போது சம்பவ இடத்தை முஷாரப் வாகனம் கடந்துவிட்டதால் அவர் உயிர் தப்பினார்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதன் பின்னர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது பண்ணை இல்லத்துக்கு கடும் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது தலைநகர் இஸ்லாமாபாத்தின் பைசாபாத் அருகே பாலம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன. ஆனால் குண்டுவெடித்த போது முஷாரப் வாகனம் அந்த இடத்தைக் கடந்துவிட்டது. இதனால் முஷாரப் உயிர் தப்பினார்.
பின்னர் அவர் பாதுகாப்பாக அவரது பண்ணை இல்லத்தில் காவலில் தடுத்து வைக்கப்பட்டார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.