மலேசிய விமானத்தில் 221 கிலோ லித்தியம் பேட்டரிகள்: விமானம் எரிந்து விழுந்ததா?
கோலாலம்பூர்: மாயமான விமானத்தில் 221 கிலோ லித்தியம் பேட்டரிகள் எடுத்துச் செல்லப்பட்டது முன்பே ஏன் தெரிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகள் குறித்து முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சரக்குகள் குறித்த விவரம் தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஒரே பில்லில் 2 ஆயிரத்து 453 கிலோ சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
லித்தியம்
மாயமான விமானத்தில் 221 கிலோ லித்தியம் பேட்டரிகள் ஏற்றப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரத்து 232 கிலோ அளவுக்கு ரேடியோ பொருட்கள் மற்றும் சார்ஜர்கள் ஏற்றப்பட்டுள்ளன.
முன்பே
விமானத்தில் இத்தனை கிலோ லித்தியம் பேட்டரிகள், சார்ஜர்கள் ஏற்றப்பட்டது முன்பே தெரிவிக்கப்படவில்லை. கடந்த வியாழக்கிழமை தான் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
பேட்டரிகள்
லித்தியம் பேட்டரிகள் 221 கிலோ அளவுக்கு விமானத்தில் ஏற்றப்பட்டபோதிலும் மலேசிய நிறுவனமான என்என்ஆர் குளோபல் லாஜிஸ்டிக்ஸின் செய்தித் தொடர்பாளரோ 200 கிலோவுக்கு குறைவான அளவே பேட்டரிகள் ஏற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீதமுள்ள 2.253 டன் சரக்குகளின் விவரத்தை தெரிவிக்கவில்லை.
மலேசியன் ஏர்லைன்ஸ்
மலேசிய விமானத்தில் 200 கிலோ லித்தியம் பேட்டரிகள் பத்திரமாக பேக் செய்யப்பட்டு ஏற்றப்பட்டதாக மலேசியன் ஏர்லைன்ஸின் சிஇஓ அகமது ஜவுஹரி யஹ்யா கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரக்கு
விமானத்தின் முழு சரக்கு விவரம் மற்றும் முதல்கட்ட விசாரணை அறிக்கையை மலேசிய அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டனர். அதில் என்என்ஆர் குளோபல் நிறுவனம் 1.99 டன் எடை கொண்ட ஒரே ரகத்தைச் சேர்ந்த 133 பொருட்களையும், 463 கிலோ எடை கொண்ட மற்றொரு ரகத்தைச் சேர்ந்த 63 பொருட்களையும் விமானத்தில் ஏற்றியுள்ளது. அதில் எத்தனை பேட்டரிகள், அவற்றின் எடை என்ன என்பது குறிப்பாக தெரிவிக்கப்படவில்லை.
விமான விபத்து
லித்தியம் பேட்டரிகளால் விமானங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் முன்பு நடந்துள்ளன. மலேசிய விமானம் மாயமான அன்று ஒரு விமானம் தீப்பிடித்து எரிந்து தரை நோக்கி வந்ததை பார்த்ததாக வியட்நாமில் எண்ணெய் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகள்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 11 தீவிரவாதிகளிடம் விமானம் மாயமானது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர்களிடம் விமானம் பற்றி விசாரிக்கவே இல்லை என்று மலேசியா தெரிவித்துள்ளது.