இந்தியாவின் பொருளாதார தடைக்கு பதிலடி- இந்திய டிவி சேனல்களுக்கு நேபாள ஆபரேட்டர்கள் தடை!
காத்மண்டு: நேபாளத்தில் மதச்சார்பற்ற அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது முதல் இந்தியாவுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியா விதித்த பொருளாதரத் தடைக்கு பதிலடியாக இந்திய டிவி சேனல்களை ஒளிபரப்புவதை நேபாள கேபிள் ஆபரேட்டர்கள் நிறுத்தி உள்ளனர்.
உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமைக்குரியது நேபாளம். அங்கு மன்னராட்சி முடிவுக்கு மக்களாட்சி நடைமுறைக்கு வந்த நிலையில் அண்மையில் புதிய அரசியல் சாசனம் பிரகடனம் செய்யப்பட்டது.
இந்துநாடாக இருந்தபோதும் மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை அந்நாடு பிரகடனம் செய்தது. இந்த புதிய அரசியல் அமைப்பில் தாங்கள் 2-ம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக இந்திய வம்சாவளி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்தப் போராட்டங்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்த கையோடு இப்பிரச்சனைக்கு தீர்வு காண சில பரிந்துரைகளையும் வழங்கியது. ஆனால் இதை நேபாளம் நிராகரித்தது.
இதனால் ஆத்திரமடைந்த மத்திய அரசு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்தை திடீரென நிறுத்தியது. இதில் நேபாளம் கடும் அதிருப்தி அடைந்தது.
இந்தியாவின் இத்தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய டிவிசேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்ற கலகக் குரல் அங்கு வெடித்தது. இதனைத் தொடர்ந்து 42 இந்திய டிவி சேனல்களின் ஒளிபரப்பை நேபாள கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் ரத்து செய்துள்ளது.