37 வயதில் உச்சபட்ச அதிகாரம்.. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா திடீர் ராஜினாமா.. இப்படி ஒரு காரணமா?
ஆக்லாந்து: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென்று அறிவித்துள்ளார். 2017 முதல் ஐந்தரை ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து வரும் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், இனி தேர்தலில் போட்டியிட போவது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் என்ன? என்பது தற்போது வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். லேபர் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2017 ல் அமைந்த கூட்டணி ஆட்சியில் பிரதமர் பதவியை பெற்றார்.
தனது 37வது வயதில் ஜெசிந்தா ஆர்டெர்ன் நியூசிலாந்தின் பிரதமரானார். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ஜெசிந்தா ஆர்டெர்ன் தொடர்ந்து பிரதமராக செயல்பட்டு வந்தார்.
பிரதமர் பதவி ராஜினாமா
கொரோனா பரவல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை இவர் தலைமையிலான அரசு சமாளித்து வந்தது. மேலும் வெளிநாடுகளுடன் நல்ல உறவை பேணிக்காத்து வந்தார். இந்த ஆண்டு நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் தான் விரைவில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தான் பிரமதர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென அறிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேச்சு
கடந்த ஐந்தரை ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வந்த இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்பை அவர் லேபர் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார். இந்த கூட்டத்தில் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‛‛இந்த பதவி குறித்து நான் நன்கு அறிவேன். இனி இதை தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என உணர்கிறேன். இதனால் இது தான் பதவி விலகலுக்கான நல்ல நேரம் என நினைக்கிறேன். நான் பதவியில் இருந்து வெளியேறாவிட்டால் அடுத்த தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியாது என நம்புகிறேன். இனி வரும் தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை'' என்றார்.
அடுத்த மாதம் நடைமுறை..
இந்த அறிவிப்பின் மூலம் பிப்ரவரி 7 ம் தேதிக்கு பிறகு ஜெசிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா நடைமுறைக்கு வரும். இதனால் ஜனவரி 22ல் லேபர் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதையடுத்து இடைக்கால பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கிடையே தான் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
என்ன காரணம்?
நியூசிலாந்தில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடைபெறும். கடந்த 2017 ம் ஆண்டுக்கு பிறகு 2020ல் தேர்தல் நடந்தது. மீண்டும் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் கருத்து கணிப்புகள் எடுக்கப்பட்டது. அப்போது கட்சியின் புகழ் என்பது மக்கள் மத்தியில் குறைந்து வருவதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. மேலும் இது கட்சிக்கு வரும் தேர்தலில் பாதகத்தை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தான் ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.