60க்கும் மேற்பட்டோர் கடத்தலில் போகோ ஹரம் தீவிரவாதிகளுக்குத் தொடர்பில்லை - நைஜீரியா
அபுஜா: நைஜீரியாவின் மைடிகுரி நகரில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர், சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் உட்பட சுமார் 60 க்கும் அதிகமானோர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
வடக்கு நைஜீரியாவை இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் நீண்ட நாட்களாகவே போராடி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 300 நைஜீரிய பள்ளி மாணவிகளைக் கடத்திய தீவிரவாதிகள் அவர்களை பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். அரசுப் படைகளால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தவர்களை விடுதலை செய்தால் மாணவிகளை விடுவிக்க தயார் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். அம்மாணவிகளை மீட்கும் முயற்சியில் நைஜீரிய அரசு அண்டை நாடுகளின் உதவியோடு ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே நைஜீரியாவின் பல பகுதிகளில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்காணோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் போர்னோ மாநிலம், மைடிகுரி நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்மாப்சா கிராமத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 60க்கும் மேற்பட்ட சிறுமிகள், சிறுவர்கள் மற்றும் சில இளம்பெண்களையும் கடத்திச் சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், இத்தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் மைக் ஓமரி கூறுகையில், ‘ ஊடகங்களில் கூறப்பட்டது போல், எவரும் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்படவில்லை. கடத்தல் நடந்ததாக சாட்சியங்கள் கூறிய போதும், கடத்தல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.