"உச்சக்கட்ட" பதற்றம்.. அடங்காத வட கொரியா! ஜப்பான் திசை நோக்கி பாய்ந்த “ராக்கெட்”! அண்டை நாடுகள் ஷாக்
பியாங்யாங்: ஜப்பானை நோக்கிய திசையில் வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் பலிஸ்டிக் ஏவுகணையை மீண்டும் வட கொரியா பரிசோதித்து இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பசிபிக் பிராந்தியம் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பலமுறை ஏவுகணை சோதனையும் நடத்தி வருகிறது.
வட கொரியாவுடனான மோதல் போக்கை கைவிட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதன் பின்னர் ஏவுகணை சோதனைகளை குறைத்த வடகொரியா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் அதை தொடங்கி இருக்கிறது.
“சீரியஸ்” ஆன மேட்டர்.. வட கொரியாவின் “ஷாக்” ட்ரீட்மெண்ட் - வரிந்துகட்டும் அமெரிக்கா! உறைந்த ஜப்பான்
ஏவுகணை
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திக் காட்டியது வடகொரியா. இந்த நிலையில் தற்போது தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆயுத சோதனைகளை வட கொரியா முடுக்கிவிட்டுள்ளது.
பதற்றம்
எனவே கொரிய எல்லையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக 3 நாடுகளையும் அச்சுறுத்தும் விதமாக அடுத்தடுத்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி தேதியிலிருந்து 5 முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கும் வட கொரியா 6 வது முறையாக தற்போது சோதனை நடத்தியுள்ளது.
செவ்வாய்கிழமை சோதனை
கடந்த 4 ஆம் தேதி வட கொரியாவின் ஏவுகணை ஜப்பான் எல்லையின் மேற்பரப்பில் பறந்ததாக தெரிவித்த அந்நாட்டு பிரதமர் அலுவலகம், மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனை மேற்கொண்ட வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தென்கொரிய அதிபர் எச்சரித்தார்.
அமெரிக்கா கருத்து
வட கொரியாவின் இந்த செயல் சட்டவிரோதமானது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அப்போது இரு நாட்டு அதிகாரிகளிடமும் வட கொரியாவுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக அமெரிக்கா ஆலோசித்து இருப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் சோதனை
இந்த நிலையில் இன்று மீண்டும் ஏவுகணையை சோதனையை வடகொரியா நடத்தி இருக்கிறது. வட கொரியாவின் கண்டன் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை மீண்டும் ஜப்பான் திசையை நோக்கி பறந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2 வாரங்களில் வட கொரியா நடத்தும் 6 வது ஏவுகணை சோதனை இது என்பதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சோதனையை சகித்துக்கொள்ள முடியாது என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.