இந்தியாவுடன் நெருக்கம்- அமெரிக்கா விருப்பம்
வாஷிங்டன்: இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணுவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்புவதாக அந்த நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சர்வதேச அமைதிக்கான அமைப்பின் மூத்த உடன்பாட்டாளர் ஆஸ்லே டெல்லிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மிகச்சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது என்று நாங்கள் பார்க்கிறோம். அதே நேரம், பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க எந்த மாதிரியான கொள்கைகளை மோடி தேர்ந்தெடுக்கப்போகிறார் என்பதுதான் மிகவும் சவாலான விஷயமாகும்.
வாஷிங்டன்னுக்கு வரும் செப்டம்பரில் நரேந்திரமோடி வர உள்ளார். அந்த வருகை வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்புகிறார். அதுமட்டுமின்றி, இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணுவதற்கு ஒபாமா விருப்பம் கொண்டுள்ளார். இந்தியாதான் நமது நாட்டுக்கு சிறந்த கூட்டு நாடாக இருக்க முடியும் என்பதே அமெரிக்காவில் பெரும்பாலானோர் கருத்து. இந்த இணக்கத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
மோடி அமெரிக்கா வரும்போது, பொருளாதார உறவுகள் குறித்து கண்டிப்பாக ஆலோசிப்போம். மோடி பிரதமரானதற்காக மட்டும் நாங்கள் இந்தியாவுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்புவதாக கூறுவது தவறு. இதற்கு முன்பிருந்தே வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.