ரசாயன ஆயுதங்களை அழிக்க 1 வருட காலமும், ரூ 6174 கோடி செலவும் ஆகும் : சிரியா அதிபர்
டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க சுமார் ஒரு வருட காலம் ஆகும் எனவும், மேலும் அதற்கு ரூ 6174 கோடி செலவழிக்க வேண்டி வரும் எனவும் அந்நாட்டு அதிபர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக சிரியா நாட்டில் அரசுக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. புரட்சி படையினரை ஒடுக்குவதற்காக ராணுவமும் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாகப் பலியானார்கள். இக்கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து சிரியாவுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்தன.
சிரியாவை தாக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்காக போர் கப்பல்களையும் சிரியா அருகே அமெரிக்கா நிறுத்தியது. அதேசமயம் சிரியா தனது ரசாயன ஆயுதங்களை அழித்துவிட்டால் தாக்குதல் நடத்தமாட்டோம் என எச்சரித்தது அமெரிக்கா. சிரியாவும் அந்த உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டதால் போர் பதட்டம் சற்று தணிந்தது.
இந்நிலையில் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘எங்கள் ராணுவம் ரசாயன ஆயுத தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
எங்களிடம் இருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நாங்கள் இதை உடனடியாக செய்ய முடியாது. ரசாயன ஆயுதங்களை அழிக்க கிட்டத்தட்ட 6174 கோடி ரூபாய் தேவைப்படும். மேலும் இதை செயல்படுத்த நிபுணர்களும் தேவைப்படுகிறார்கள். எனவே ஒவ்வொன்றாக தான் ஆயுதங்களை கடும் சிரமத்துக்கிடையே அழிக்க முடியும். இதற்கு ஒரு ஆண்டு காலம் தேவைப்படும்.
அமெரிக்கா எங்கள் நாட்டு உள் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக நான் கருதுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.