பாக். ராணுவ உதவியால் வலிமை பெற்றுவரும் லஸ்கர்-இ-தொய்பா: அமெரிக்க நிபுணர்கள் தகவல்
வாஷிங்டன்: பாகிஸ்தானின் உதவியால் கடந்த 5 ஆண்டுகளில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் வலிமை பெற்றுள்ளதாகவும், இதனால், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர் அமெரிக்க நிபுணர்கள்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பயங்கர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2008ம் ஆண்டு, மும்பையில் இவர்கள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிர் பலியானார்கள்.
தொடர்ந்து, காஷ்மீருக்குள் ஊடுருவி இந்திய ராணுவம், அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வரும் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் உளவுப்பிரிவு (ஐ.எஸ்.ஐ.) ரகசிய உதவிகள் அளித்து ஊக்குவித்து வருவதாகவும், மேலும், அந்நாட்டு ராணுவமும், ஐ.எஸ்.ஐ. அமைப்பும் இவர்களை இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக தங்களின் ‘சாதகமான கருவி'யாக பயன்படுத்தி வருகின்றன எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிபுணர்கள்.
இது குறித்து அவர்கள் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது....
தெற்கு ஆசிய தீவிரவாத தடுப்பு அமெரிக்க மூத்த நிபுணரும், சி.ஐ.ஏ. முன்னாள் ஆய்வாளருமான புரூசி ரிடெல் :
‘லஸ்கர்-இ-தொய்பா முன்பு இருந்ததை விட தற்போது அதிக வலிமையாக இருக்கிறது. பாகிஸ்தானில் ஸ்திரமாக வலிமை இயக்கமாக விளங்குகிறது. இவர்களுக்கு வளைகுடா நாடுகள் மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் அமைப்பு மூலம் நிதி உதவி கிடைக்கிறது. இது இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் பெரிய அச்சுறுத்தல் ஆகும்' என்றார்.இதேபோன்று வெள்ளை மாளிகையின் கீழ் பணியாற்றிய ஆசிய பகுதி தேசிய பாதுகாப்பு முன்னாள் அதிகாரியான அனிஷ் கோயல் கூறுகையில், ‘இவர்கள் வலுவை இழந்து விட்டார்கள் என கருத முடியாது. இப்போது கூட இந்தியாவுக்கு பெரிய அச்சுறுதல் கொடுப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அமெரிக்காவுக்கு நேரடி அச்சம் இல்லை என்றாலும் அதை ஒதுக்கிவிட முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த ஆரிப் ஜமால்:
‘லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆயுத பிரிவாக செயல்படும் ஜமாத்-உட்-டாவா(ஜெ.யூ.டி.) அமைப்பு கடந்த 5 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இவர்களிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 5 லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் சண்டையிட தகுதியான இளைஞர்களாக இருக்கிறார்கள்' என தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் யார் ஆட்சியில் இருந்தாலும் இவர்களுக்கு உதவிகள் வழங்கி தங்களுக்கு சாதகமான ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.