இந்து சிறுபான்மையினரை காக்க தவறிய பாக்.. இந்து கோயில் இடிப்பிற்கு.. வெளியுறவு துறை அமைச்சகம் சாடல்
கராச்சி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
Recommended Video
பாகிஸ்தான் நாட்டின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் ரஹிம் யார்கான் என்ற மாவட்டத்தில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து கோயில் மீது தாக்குதல்
பாகிஸ்தான் நாட்டிலுள்ள கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் ரஹிம் யார்கான் மாவட்டத்தில் உள்ள இந்து கோயில் மீது அங்கிருந்த இஸ்லாமியர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயிலின் ஒரு பகுதிக்கு தீ வைத்த வன்முறையாளர்கள், அங்கிருந்த சிலைகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளனன. இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்
இந்த வன்முறைச் சம்பவத்தைப் பாகிஸ்தான் போலீசார் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அங்குப் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாகவே இந்தப் பகுதியில் இந்து முஸ்லீம்கள் அமைதியாகவே வாழ்ந்து வந்ததாகவும் கடந்த வாரம் 8 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள மத நூலகத்தில் சிறுநீர் கழித்ததாலேயே இந்த வன்முறை ஏற்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்து குடும்பங்கள்
இந்த வன்முறைச் சம்பவத்தில் இந்து கோயில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. பாதுகாப்புப் பணிகளில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவரைக்கூடப் பாகிஸ்தான் போலீசார் கைது செய்யவில்லை. அதேநேரம் அங்குள்ள 100 இந்து குடும்பங்களும் பாதுகாப்பாகவே உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வன்முறைச் சம்பவத்திற்குக் கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது, இச்சம்பவத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியா கண்டனம்
இந்த வன்முறைச் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மத சிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும் வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வன்முறையாளர்கள் கோயிலை மட்டும் தாக்கவில்லை. அருகிலிருந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளையும் தாக்கியுள்ளனர். சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு, மற்றும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து நடந்து வருகிறது," என்றார்.












Click it and Unblock the Notifications