தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியா ஆதரவு- ஐ.நா.விடம் ஆதாரம் கொடுத்ததாக சொல்லும் பாக்.
நியூயார்க்: பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கத்துடன் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை ஐ.நா.விடம் ஒப்படைத்து உள்ளோம் என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.
ஐ.நா.சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியிருந்தார். மேலும் 4 அம்ச திட்டத்தை செயல்படுத்தினாலோ அமைதி நிலவும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சரியான பதிலடி கொடுத்தார். 4 அம்சத் திட்டங்கள் எல்லாம் தேவையில்லை.. நீங்கள் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே போதுமானது என சுஷ்மா சாடியிருந்தார்.
தற்போது சுஷ்மா சுவராஜ் பேச்சுக்கு பதிலளித்து உள்ள பாகிஸ்தான் பிரதிநிதி, இந்தியாவுக்கு தீவிரவாத இயக்கத்துடன் உள்ள தொடர்பு குறித்தான ஆவணங்களை ஐ.நா.விடம் ஒப்படைத்து உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
குறிப்பாக தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்துடன் இந்தியாவின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு தொடர்பிருப்பதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன் 2007-ம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பு உடைய குற்றவாளிகளை நீதிக்கு முன்நிறுத்துவதில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டிஉள்ளது.