மோடிதான் என்னை மீட்டது! பாகிஸ்தான் மாணவியிடமிருந்து பறந்து வந்த தேங்ஸ்! அசத்தும் ஆபரேஷன் கங்கா
கீவ்: ‛‛உக்ரைனில் இக்கட்டான சூழ்நிலையில் தவித்த எங்களை மீட்ட இந்திய தூதரகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி'' என பாகிஸ்தான் மாணவி மகிழ்ச்சியுடன் பேசும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி உள்ளது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் உருக்குலைந்து வருகிறது. பொதுமக்கள் சுரங்கங்களில் பதுங்கி உயிரை பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் உணவு, குடிநீர் இன்றி குண்டு சத்தங்களுக்கு நடுவே தவித்து வருகின்றனர்.
உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்தது. ‛ஆபரேஷன்' கங்கா எனும் திட்டம் மூலம் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
'Only PR' - பிரதமர் மோடிகிட்ட எந்த திட்டமும் இல்லை - பாஜகவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி!
ஆபரேஷன் கங்கா
ரஷ்யா, .உக்ரைன் வீரர்களின் மோதலால் போர்களமாகி உள்ள பகுதிகளில் இருந்து இந்திய மாணவர்கள் வாகனங்கள் மூலம் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாகியா நாடுகளின் எல்லைக்கு வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் என்பதை காட்டிக்கொள்ள அவர்கள் தங்களுடன் இந்திய தேசியக்கொடியை எடுத்து சென்றனர். பஸ் உள்ளிட்ட வாகனங்களிலும் இந்திய தேசியக்கொடியை ஒட்டி வைத்திருந்தனர். இதே டெக்னிக்கை பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாட்டு மாணவர்களும் பயன்படுத்தி வெளியேறினர். இது இந்தியாவை பெருமைப்படுத்தியது.
போர் நிறுத்தங்கள்
இவ்வாறு வெளியேறும் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு உணவு, இருப்பிடம் வழங்கி விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வருகிறது. இதற்கிடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு சில நாட்களில் முக்கிய நகரங்களில் போர் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் உக்ரைன் மக்கள் மட்டுமின்றி இந்தியர்களும் வெளியேறினர்.
பாகிஸ்தான் மாணவி மீட்பு
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மாணவி ஆஸ்மா சபீக், உக்ரைனில் போர் நடக்கும் நகரில் இருந்து வெளியேறி உள்ளார். மேற்கு உக்ரைன் நோக்கி சென்றபோது இவரை இந்திய தூதரகம் மீட்டது. இதையடுத்து ஆஸ்மா சபீக் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்திய பிரதமருக்கு நன்றி
அந்த வீடியோவில், ‛‛"மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உக்ரைனில் நாங்கள் சிக்கி தவித்தோம். அனைத்து வழிகளிலும் எங்களுக்கு உதவிய கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் எங்களுக்கு ஆதரவளித்த இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய தூதரகத்தால் நாங்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவோம் என நம்புகிறேன்'' என்றார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி உள்ளது. இவர் விரைவில் தனது குடும்பத்துடன் இணைய உள்ளார்.
Recommended Video
இதுவரை எவ்வளவு
உக்ரைனில் போர் 24 முதல் துவங்கியது. இந்தியா சார்பில் பிப்ரவரி 22 முதல் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 18 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதுதவிர வங்கதேசம், நேபாளம், வடஆப்பிரிக்கா நாடான துனிசியா மாணவர்களையும் இந்தியா மீட்டுள்ளது. குறிப்பாக உக்ரைனில் தவித்த 9 வங்கதேச மாணவர்களை இந்தியா மீட்டதற்கு அந்நாட்டு பிரதமர் செய்க் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.