ஜப்பான் பிரதமரை இன்று சந்திக்கும் மோடி: பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுகின்றன
டோக்கியோ: ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை இன்று சந்தித்து பேசுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் சென்ற அவர் அந்நாட்டின் பழைய நகரான கியோட்டோவில் தங்கினார். அவர் அங்குள்ள புத்த கோவிலுக்கு சென்று வழிபட்டார். கோவிலுக்கு மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் சென்றிருந்தார். பின்னர் அதே நகரில் இருக்கும் மற்றொரு கோவிலுக்கும் சென்றார். அங்கு மோடியை பார்த்த மக்கள் அவருக்கு கை கொடுத்தனர். அவரும் மக்களுடன் ஆர்வமாக கைகுலுக்கி பேசினார்.
இந்நிலையில் அவர் இன்று டோக்கியோ சென்று ஷின்சோ அபேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சிவில் அணு சக்தி குறித்து இரண்டு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
மேலும் பூமியில் கிடைக்கும் அபூர்வ இயற்கை வளங்களை வைத்து புதிய பொருட்களை செய்வது குறித்தும் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.