அமீரக உயர்வுக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும் இந்தியத் தொழிலாளர்களுடன் மோடி சந்திப்பு
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் வானுயர்ந்த கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் அருங்காட்சியகங்களை கட்டும் இந்திய தொழிலாளர்களை அபுதாபியில் உள்ள தொழிலாளர் முகாமில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அபுதாபிக்கு சென்ற மோடிக்கு அரசு சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துமாறு சர்வதசே அளவில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் மோடி அமீரகம் சென்றுள்ளார். நேற்று இரவு மோடிக்கு அபுதாபி இளவரசர் ஹமீது பின் ஜயீத் அல் நஹ்யான் விருந்து அளித்தார். விருந்தின்போது அவர் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக அவர் அபுதாபியில் உள்ள தொழிலாளர் முகாமிற்கு சென்றார். முகாமிற்குள் மோடி நுழைந்ததும் சுமார் 200 இந்திய தொழிலாளர் கைதட்டி அவரை வரவேற்றனர். முகாமில் உள்ள இந்திய தொழிலாளர்களிடம் மோடி பேசினார். அப்போது அவர் அவர்களின் வேலை, தங்கும் வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவரம் கேட்டு அறிந்தார்.
துபாயில் நடக்க உள்ள உலக எக்ஸ்போ 2020 மற்றும் கத்தாரில் 2022ம் ஆண்டு நடக்கும் ஃபீபா உலகக் கோப்பை ஆகியவற்றுக்கான அரங்குகள் அமைக்கும் பணியில் இந்திய தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் எந்தவித மனித உரிமை மீறல்களும் நடந்துவிடக் கூடாது என்பதில் இந்திய அரசு தெளிவாக உள்ளது.