ஏர் ஏசியா விபத்து: லைப் ஜாக்கெட் அணிந்திருந்த உடல் மீட்கப்பட்டதில் புதிய சர்ச்சை
ஜகர்த்தா: ஏர் ஏசியா விமான விபத்தில் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களில் ஒன்றில் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததாக வெளியாகியுள்ள செய்தியானது அனைத்து தரப்பிலும் கடுமையான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கியூஇசட்8501 நடுவானில் காணாமல் போனது.
2 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் ஓரியன் விமானம் கடலில் மிதக்கும் சில பாகங்களை கண்டுபிடித்து படம் பிடித்து அனுப்பியது.
அதன்பின்னர் முடுக்கிவிடப்பட்ட மீட்பு பணியில், இன்று காலை மீட்கப்பட்ட நான்கு உடல்களில் ஒருவர் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததாக செய்தித் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த யூகங்களை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அதே நேரத்தில், வானியல் துறை சார்ந்த ஆய்வாளர்கள், விமானமானது நீரில் மோதிய பின்னர்தான் உடைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து சென்று, அங்கிருந்து கயிறு மூலம் மீட்புக்குழுவினர் உடல்களை மீட்டு கப்பலுக்கு கொண்டு வருகின்றனர். கடற்பரப்பில் சிதறிக் கிடந்த விமான பாகங்களும் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை வரை 40க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக இந்தோனேசிய கடற்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
ஆனால், 6 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக அரசின் தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த 6 பேரில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் விமான ஊழியர்களுக்கான சீருடை அணிந்திருந்தனர். 3 பேர் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி மிதந்ததை பார்த்ததாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பைலட் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சோனார் ரேடாரில் பதிவாகியுள்ள படத்தில் ஒரு இடம் கருப்பாக உள்ளது. எனவே, அது விமானத்தின் உடற்பகுதிதான் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடலுக்குள் ஒரு இடத்தில் நிழல்போன்று தெரிவதாகவும், அது விமானத்தின் உடற்பகுதியாக இருக்கலாம் என்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, நீர்மூழ்கி வீரர்கள் கடலுக்குள் மூழ்கி உடல்களை மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். விமான பாகங்கள் மற்றும் முக்கியமான கருப்பு பெட்டிகளையும் தேடி வருகின்றனர். அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.