இடது கையால் காந்தி கையெழுத்திட்ட அரிய புகைப்படம்... ரூ. 28 லட்சத்துக்கு ஏலம்!
லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் எடுக்கப்பட்ட காந்தியின் அரிய புகைப்படம் ரூ. 28 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் எடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய புகைப்படம் ரூ. 28 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இங்கிலாந்து அரசுடன் வட்ட மேஜை மாநாடு மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த மாநாடு மூன்று கட்டங்களாக 1930 முதல் 1932 வரை லண்டனில் நடைபெற்றது. இதில், 1931ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் நமது தேசப்பிதா மகாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மதன் மோகன் மால்வியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காந்தி, பவுண்டன் பேனாவினால் எம்.கே.காந்தி என கையெழுத்து போட்டிருந்தார். காந்தி தனது இடதுகைப் பழக்கத்திற்கு மாறிய சமயத்தில் கையெழுத்திட்ட புகைப்படம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.
இந்த அரிய புகைப்படமானது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஆர்.ஆர்.மையத்தில் ஏலம் விடப்பட்டது. 41 ஆயிரம் டாலருக்கு இது ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ. 28 லட்சம் ஆகும்.
இவ்வளவு பணம் கொடுத்து இந்தப் புகைப்படத்தை ஏலத்தில் எடுத்தவர் யார் என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.
இந்த ஏல நிகழ்ச்சியில் காந்தியின் புகைப்படம் மட்டுமின்றி, கார்ல் மார்க்ஸ் எழுதிய ’ரெவிலேஷன்’ கடிதங்களின் நகல்கள், எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய அறிவுரைக் கடிதம் போன்றவையும் நல்ல விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.