48500 வருட பழையது.. ஐஸ் உருகி.. வெளியே வந்த.. 13 ஸோம்பி வைரஸ்கள்.. அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்!
மாஸ்கோ: ரஷ்யாவில் உருகும் ஐஸ் பாறைகளில் இருந்து 48, 500 ஆண்டுகள் பழமையான ஸோம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட 13 வைரஸ்களை வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முன் பார்த்ததோ, கேள்வி பட்டதோ கிடையாது. இவ்வளவு காலம் ஐஸ் பாறைகளுக்கு உள்ளேயே இருந்ததால் இந்த வைரஸ்கள் குறித்து இவர்கள் கேள்வி பட்டதே இல்லை. இவை எல்லாம் மனிதர்களை தாக்கினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்!
உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.
போலந்தில் விழுந்த ஏவுகணைகள்.. நேட்டோவை சீண்டும் ரஷ்யா.. அவசர ஆலோசனையில் இறங்கிய 'பென்டகன்'
காலநிலை
ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.
வைரஸ்
இந்த நிலையில்தான் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக ஐஸ் கட்டிகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் வேகமாக உயரும்.இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம். இதெல்லாம் எல்லோரும் எதிர்பார்த்த, எதிர்பார்க்கும் அபாயங்கள் என்றாலும், வேறு சில அபாயங்களும் உள்ளன. அதுதான் வைரஸ்கள் வெளியேறுவது! அதாவது ஐஸ் கட்டிகளுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக்கொண்டு இருக்கும் வைரஸ்கள், இந்த ஐஸ் கட்டிகள் உருகுவதால் வெளியேறும் அபாயம் உள்ளது. நமக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத, மருத்துவர்கள் இதற்கு முன் கேள்வி கூட படாத வைரஸ்கள் இதன் மூலம் தோன்றும் அபாயம் உள்ளதாக வைரலாஜி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
என்ன நடக்கும்?
அந்த ரஷ்யாவில் ஐஸ் கட்டிகள் வேகமாக உருகுவது நடந்து வருகிறது. சைபீரியாவில் அதிகமாக இப்படி ஐஸ் பாறைகள் உருகி வருகின்றன.இங்கு உருகிய ஐஸ் பாறைகளில் இருந்து 13 புதிய வைரஸ்களை கண்டுபிடித்து உள்ளனர். இந்த வைரஸ்கள் 48, 500 ஆண்டுகள் பழமையானது. இவை இத்தனை வருடங்களாக ஐஸ் பாறைகளுக்கு உள்ளே உறைந்த நிலையில் இருந்துள்ளது. ஐஸ் பாறைகளுக்கு உள்ளே இருந்ததால் அவை சாகாமல் அப்படியே இருந்துள்ளன. இப்போதும் கூட அவை பரவும் தன்மை கொண்டதாக இருந்துள்ளன. இந்த வைரஸ்களை ஸோம்பி வைரஸ்கள் என்று இதை ஆய்வு செய்த ஐரோப்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
வைரஸ்
இதில் இருக்கும் மிக பழைய வைரஸ், Pandoravirus Yedoma என்ற வைரஸ் ஆகும். இது 48,500 வருடங்கள் பழமையானது. இதற்கு முன் 2013ல் 30,000 வருடங்கள் பழமையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரெக்கார்டை தற்போது இந்த வைரஸ் முறியடித்து உள்ளது. இவை ஸோம்பி வைரஸ்கள் என்றாலும், இதன் குணம் என்ன? படங்களில் காட்டுவது போல மனிதர்களை இவை ஸோம்பிகளாக மாற்றுமா என்றெல்லாம் இப்போது ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கொடுக்கவில்லை. இத்தனை காலம் ஐஸ் உள்ளே இருந்தும் அவை உயிரோடு இருப்பதால் அதை ஸோம்பி வைரஸ்கள் என்று கூறுகின்றனர். இவை மனிதர்களை தாக்குமா என்பது தெரியாது. ஆராய்ச்சி செய்ய செய்யவே இதன் குணங்கள் தெரிய வரும். ஆனால் இவை மனிதர்களை தாக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர். ஏற்கனவே சீனாவில் இதேபோல் வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சீனா
சீனாவின் மேற்கு பகுதியில் திபெத் அருகே கடந்த 2015ல் குலலியா ஐஸ் கேப் என்ற பகுதியில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு உருகும் நிலையில் இருந்த பல்வேறு பனிப்பாறைகள் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து ஆராய்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.இதில் நடத்திய சோதனையில் மொத்தம் 33 விதமான வைரஸ்கள் இந்த பாறைகளில் உறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதம் இந்த வைரஸ்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த வைரஸ்கள் எல்லாம் சாகாமல் அப்படியே உயிரோடு இருந்திருக்கிறது. இந்த வைரஸ்களின் காலம் 15 ஆயிரத்திற்கு முந்தையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த வைரஸ்களில் 28 வைரஸ்களை வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முன் பார்த்ததோ, கேள்வி பட்டதோ கிடையாது. இவ்வளவு காலம் ஐஸ் பாறைகளுக்கு உள்ளேயே இருந்ததால் இந்த வைரஸ்கள் குறித்து இவர்கள் கேள்வி பட்டதே இல்லை. இவை எல்லாம் மனிதர்களை தாக்கினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.
இதனால் இதன் பண்புகள் யாருக்கும் தெரியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது காலநிலை மாற்றம் காரணமாக இது போன்ற பனிப்பாறைகள் உருகி அதன் உள்ளே புதைந்து உயிரோடு காத்திருக்கும் வைரஸ்கள் வெளியே வரும் ஆபத்துகள் உலகம் முழுக்க ஏற்பட்டுள்ளன.