அதிர்ச்சி! அணு ஆயுத போர்க்கப்பலை இறக்கும் ரஷ்யா.. அமெரிக்கா அருகே நிலைநிறுத்த முடிவு.. பிளான் என்ன?
மாஸ்கோ: உக்ரைன் போர் ஒருபுறம் ரத்தக்களறியுடன் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் தங்களை எதிர்க்கும் நாடுகளை பயமுறுத்தும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக தெரிகிறது.
உலகிலேயே மிக ஆபத்தான போர்க்கப்பலாக அறியப்படும் ரஷ்யாவின் 'கர்ஷ்கோவ்', அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்கு மிக அருகே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
இதுவரை அமெரிக்காவை வாய்மொழியில் மட்டும் எச்சரித்து வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தற்போது செயலில் இறங்கிவிட்டதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
சீண்டி பார்க்கும் அமெரிக்கா
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர், 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அழகிய நாடான உக்ரைன் தற்போது கட்டிட இடிபாடுகளால் நிறைந்துள்ளன. நாள்தோறும் மரண ஓலங்கள் மட்டுமே அங்கு நிரந்தரமாக கேட்டு வருகின்றன. இத்தனை மோசமான பாதிப்புகளை சந்தித்தாலும், ரஷ்யாவிடம் மண்டியிட உக்ரைன் தயாராக இல்லை. அதனால் முடிந்த வரை அந்நாடு எதிர்த்து போராடி வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுத உதவிகளையும், பண உதவியும் செய்து வருவது ரஷ்யாவை கடுங்கோபம் அடையச் செய்துள்ளது.
சீற தயாராகும் ரஷ்யா
"உக்ரைனுக்கு உதவும் நாடுகள் எதுவாக இருந்தாலும் அதை ரஷ்யா பரம எதிரியாக பார்க்கும்; எதிரிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்க ரஷ்யா என்றும் தயங்காது" என கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதின் வெளிப்படையாக எச்சரித்திருந்தார். பெயரை குறிப்பிடாமல் கூறினாலும் அது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கையாகவே பார்க்ப்பட்டது. இருந்தபோதிலும், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் ஆயுத உதவிகளை நிறுத்தவில்லை.
எமனை அனுப்பிய புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் எச்சரிக்கையை சட்டை செய்யாமல் இருந்த அமெரிக்கா தற்போது சற்று ஆடி தான் போயிருக்கிறது. ஏனெனில், ரஷ்யாவின் அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பலை அட்லாண்டிக் கடலில் நிறுத்தியுள்ளார் புதின். அமெரிக்காவின் 14 மாகாணங்களை ஒட்டிய கடற்பகுதியில் இரவும் பகலுமாக சுற்றி வருகிறது ரஷ்யாவின் 'கர்ஷ்கோவ்' போர்க்கப்பல். உலகிலேயே மிகவும் ஆபத்தான போர்க்கப்பலாக அறியப்படுவதுதான் 'கர்ஷ்கோவ்'.
கையை பிசையும் அமெரிக்கா
சர்கோன் உட்பட அதிநவீன ஏவுகணைகள் கர்ஷ்கோவ் போர்க்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது என்பதுதான் உலக நாடுகளின் அச்சத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இவை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை. சர்கோன் ஏவுகணை 1,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். இது ஒலியைவிட 9 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. அதுமட்டுமல்லாமல், இந்த ஏவுகணையை ரேடாரில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். எந்தவொரு ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் சர்கோன் ஏவுகணைகளை அழிக்க முடியாது என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கூட இந்த ஏவுகணைக்கு இணையான ஏவுகணை இல்லை எனக் கூறப்படுகிறது. வெறும் வாய் பேச்சுடன் விளாடிமிர் புதின் நிறுத்திக் கொள்வார் என நினைத்து வந்த அமெரிக்காவுக்கு, ரஷ்யாவின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.