வீட்டிற்குள் இருந்தே தாக்கும் உக்ரேனியர்கள்..சற்றே மிரண்ட ரஷ்யா.. சமாதான தூதை நிராகரித்த ஜெலன்ஸ்கி
கீவ் : உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவத்தினர் முழுமையாக நுழைந்துள்ள நிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
Recommended Video
உக்ரைன் மீதான 4ஆம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர்.
குறிப்பாக கீவ் நகரத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் எனவும், ஆனாலும் போராடுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்தார்.

ரஷ்யா தாக்குதல்
தலைநகரிலிருந்து வெறும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வரும் நிலையில், தாக்குதல் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடி ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ள நிலையில், ஆயிரம் டாங்கர் எதிர்ப்பு ஆயுதம் மற்றும் 500 ஸ்டிங்கர் ஏவுகணைகளை உக்ரேன் நாட்டிற்கு வழங்குகிறது ஜெர்மனி. இப்படி 10க்கும் மேற்பட்ட நாடுகள் உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடும் கண்டனம்
உக்ரைன் நாட்டின் தலைநகரின் மீது படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைன் மக்கள் புகலிடம் தேடி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சில மக்களோ ‘வீழ்வது யாராகினும், வாழ்வது நாடாகட்டும்' என தங்கள் நாட்டிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றனர். மேலும் பெண்கள் ஆயுதமேந்தி போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்கின் ஆதரவு உக்ரைனுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

மக்களும் சண்டை
உக்ரைனில் தங்கள் ராணுவப் பணியை வீரமாகச் செய்ததற்காக ரஷ்ய சிறப்புப் படைகளுக்கு புடின் நன்றி தெரிவித்துள்ள நிலையில், கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் மக்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் அரசு மக்களிடம் ஆயுதங்களை வழங்கியுள்ள நிலையில், ரஷ்ய படைகள் மீது வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுட்டவுடன் ரஷ்ய படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்ய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தி, 471 உக்ரைன் ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

போரை நிறுத்த தயார்
போர் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது கூட உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனின் மிகப்பெரிய இரண்டாவது நகரை கைப்பற்றி விட்ட நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலைநகரை கைப்பற்றி விடுவோம் எனக் கூறியுள்ளது ரஷ்யா ஆனால் தற்போது கூட ஆயுதங்களை கைவிட்டுவிட்டு வந்தால் உக்ரைனுடன் பொலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்ய அரசு கூறியுள்ளது.

உக்ரைன் மறுப்பு
ஆனால் ரஷ்யாவின் இந்த அறிவிப்பை ஏற்க உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார் தங்கள் நாட்டில் அத்துமீறி நுழைந்துள்ளனர் அவர்கள் தானாகவே வெளியேற வேண்டும் எனவும் அதுவரை நானும் தனது நாட்டு மக்களும் இறுதிவரை போராடுவோம் என அவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது..












Click it and Unblock the Notifications