விண்வெளிவரை சென்ற போர்: அமெரிக்கா உடனான விண்வெளி உறவு துண்டிப்பு - ரஷ்யா அறிவிப்பு
உக்ரைன் ரஷ்யா போர் விண்வெளி வரை சென்றுள்ளது. சர்வதேச விண்வெளி நிலைய பணிகளில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் என்ஜின் வழங்குவதையும் நிறுத்தி கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு அதிகாரப்பூர்வ போரை தொடங்கிய நிலையில், இன்று 8வது நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், சற்றும் தொய்வின்றி ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் கீவ்விலும், 2வது பெரிய நகரமான கார்கிவ்விலும் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பதற்றமான சூழல்
இந்நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷ்யா உக்ரைன் நாட்டு மீது போர் தொடுத்துள்ளதை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.

பொருளாதாரத்தடை
எதற்கும் ரஷ்யா செவி சாய்க்காத நிலையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை உலக நாடுகள் விதித்து வருகிறது. இதனிடையே, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ரஷ்யாவும், உக்ரைனும் அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விண்வெளி தொடர்பு
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது உலக நாடுகள் பல தொடர்ந்து பொருளாதார தடை நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ரஷ்யாவும் உலக நாடுகளுக்கு பதிலடி தரும் விதமாக பல நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே அமெரிக்கா உடனான விண்வெளித் தொடர்பை ரஷ்யா துண்டித்துள்ளது.

ரஷ்யா துண்டிப்பு
சர்வதேச விண்வெளி நிலைய பணிகளில் ஜப்பான், கனடா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா இணைந்துள்ளன. அங்கு உலக விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு இணைந்து பல்வேறு ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு ஆய்வுகளை இந்த விண்வெளி நிலையம் நடத்தி வரும் சூழலில் அந்த ஒத்துழைப்பை ரஷ்யா முழுமையாக துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதப்போர்
ஏனெனில் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ரஷ்யாவின் பங்களிப்பு ஆகும். பல கோடி டாலர்கள் மதிப்பிலான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வரும் சூழலில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணு ஆயுத போர் என்பது தங்கள் கையில் இல்லை என்றும் அது முழுக்க முழுக்க நேட்டோ படைகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் கைகளில் தான் இருக்கிறது.எனவே அணு ஆயுத பயன்பாடு என்பது தங்கள் நிலைப்பாடு இல்லை என்று ரஷ்ய தரப்பு விளக்கியுள்ளது.

ராக்கெட்டில் கொடிகள் அகற்றம்
இதனிடையே செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டில் இருந்து இந்தியாவின் கொடியைத்தவிர அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கொடிகளை ரஷ்யா அகற்றியுள்ளது. கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தங்கள் நாட்டின் ராக்கெட்டில் சில நாடுகளின் கொடிகள் இல்லாமல் இருப்பது சிறப்பாக இருக்கும் என்று ரஷ்யா விண்வெளி ஆய்வு நிறுவனத்தலைவர் டிமிட்ரி ரோகோசின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications