விண்வெளிக்கும் சென்ற வல்லரசுகளின் சண்டை! சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலகும் ரஷ்யா
மாஸ்கோ: உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.
கடந்த பிப். மாதம் இறுதியில் தொடங்கிய உக்ரைன் போர் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. முதலில் சீக்கிரமாகவே இந்தப் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், உக்ரைன் வீரர்கள் உறுதியாகப் போரிட்டதால், சண்டை நீண்டு கொண்டே போனது. இப்போதும் கூட உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடரவே செய்கிறது.
அருகருகே 3 சூரியன்கள்.. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்!
உக்ரைன் போர்
உக்ரைன் போர் என்பது இரு நாடுகளை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கடுமையாகப் பாதித்து உள்ளது. போரால் உக்ரைனில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது உலகின் பல நாடுகளிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா தொடங்கிய ஆஸ்திரேலியா வரை பல்வேறு உலக நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையம்
இந்தச் சூழலில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்தத் தகவலை ரஷ்யா விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் யூரி போரிசோவ் அதிபர் புதினிடம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விலகும் ரஷ்யா
இது தொடர்பாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் யூரி போரிசோவ் கூறுகையில், "ஏற்கனவே கூட்டணி நாடுகளுக்கு நாங்கள் அளித்த கடமைகளையும் நாங்கள் முறையாக நிறைவேற்றுவோம். ஆனால் 2024க்குப் பிறகு இந்த நிலையத்தை விட்டு வெளியேறுகிறோம். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுத்துவிட்டோம்" என்றார்.
சர்வதேச விண்வெளி மையம் என்றால் என்ன
சர்வதேச விண்வெளி மையம் என்பது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், யூரோப், கனடா நாடுகள் இணைந்து உருவாக்கியதாகும். இதில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவும் ரஷ்யாவும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறது. இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் வெகு சில துறைகளில் இதுவும் ஒன்றாகும்.
ரஷ்யாவால் முடியுமா?
இப்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யா தனக்கென சொந்தமான ஒரு ஆய்வு மையத்தை விண்வெளியில் ஏற்படுத்த உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கும்போது, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ரஷ்யா விலக உள்ளது. இருப்பினும், விண்வெளி துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே ரஷ்யாவுக்குத் தோல்விகளே கிடைத்து வருகிறது. இதனால் ரஷ்யாவால் சொந்தமாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை உண்டாக்க முடியுமா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.