ஊக்க மருந்து விவகாரம்: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு முழுமையான தடை இல்லை!
மாஸ்கோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு முழுமையாக தடையில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.
ரஷிய தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசும், தடகள சங்கமும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரஷ்ய நாட்டின் தடகள அணி ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது.

இந்த தடை உத்தரவை எதிர்த்து சுவிட்சர்லாந்தின் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் ரஷியா மேல்முறையீடு செய்தது. இது குறித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அப்போது, ரஷ்யா ஒலிம்பிக்கில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க விளையாட்டு தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.
மேலும் சர்வதேச தடகள கூட்டமைப்பின் விதிமுறைப்படி, அந்த கூட்டமைப்பினால் இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதியில்லாதவர்கள் என்பது சரியான முடிவுதான் என்று கூறியது. ரஷ்யாவிலிருந்து 387 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றிருந்த நிலையில், ஊக்க மருந்து சர்ச்சையை அடுத்து ஒட்டு மொத்த வீரர்களும் பங்கு பெற முடியாது என்ற கருத்து நிலவியது,
இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு முழுமையான தடையில்லை. ரஷ்ய தடகள வீரர்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தவறு செய்யாத, ரஷ்ய வீரர்கள், வீராங்கனைகள் பாதிக்கப்படக் கூடாது. எனவே அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என்பது குறித்து ஒலிம்பிக் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications