திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது "கேஸ்" போடும் மகள்கள்... இது சவுதி அரேபியாவில்!
ரியாத்: சவுதி அரேபியாவில் உரிய நேரத்தில் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை எனக் கூறி பேற்றோர் மீது வழக்குத் தொடரும் மகள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘பருவத்தே பயிர் செய்' என்ற பழமொழி பெண்களின் திருமணத்திற்கும் பொருந்தும் எனலாம். காலந்தாழ்த்தி செய்யப் படும் திருமணங்களால் பெண்கள் மனரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றனர்.
எனவே, தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சமூகத்திற்கு எதிராக மட்டுமல்ல, தங்கள் பெற்றோருக்கு எதிராகவும் போராடும் நிலைக்கு பெண்கள் வந்து விட்டார்கள் என்பதைத் தான் சமீபத்திய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
பெற்றோர் மீது புகார்...
உரிய காலத்தில் திருமணம் செய்து தர மாட்டேன் என்கிறார்கள் என பெற்றோர் மீது மகள்கள் வழக்குத் தொடுத்து வருகின்றனர்.
சவுதியில்...
இது நடப்பது கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள சவுதி அரேபியாவில் என்பது தான் குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் வழக்குகள்...
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 11 வழக்குகளும், மதினா நகரில் 4 வழக்குகளும், தம்மம், மக்கா, ஜெட்டா, ஜசான் ஆகிய ஊர்களில் தலா 2 வழக்குகளும் இதுபோல் தொடரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய சட்டம்...
இதைப் பார்த்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர், ‘குறிப்பிட்ட வயதை எட்டியவுடன், பெற்றோரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், பெண்கள் தாங்களே திருமணம் செய்துகொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.