14-3-3 ஜீட்டா... உடல் பருமனுக்கு காரணமான மரபணு கண்டுபிடிப்பு!
ஒட்டாவா: உடல் பருமனுக்குக் காரணமான மரபணுவைக் கண்டறிந்துள்ளனர் கனடா நாட்டு விஞ்ஞானிகள். இந்த மரபணு 14-3-3 ஜீட்டா என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
உடல் பருமன் என்பது சர்வதேசப் பிரச்சினையாக உள்ளது. உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அறிவியல் வளர்ச்சியால் எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் வந்து விட்டது. இதனால் மனித உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது. இதன் காரணமாக எண்ணிலடங்கா நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிறான் மனிதன். அதோடு ஒபேசிடி எனும் உடல் பருமனும் அவனைத் தாக்குகிறது.
மரபணு காரணமாக...
உடல் உழைப்பு இல்லாததால் மட்டுமின்றி, சிலருக்கு மரபணு காரணமாகவும் உடல் பருமன் ஏற்படுகிறது. ஆனால், உடல் பருமனே இதய நோய் உள்ளிட்டப் பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்து விடுகிறது.
உடற்பயிற்சி, டயட்...
எனவே, உடல் பருமனைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மனிதர்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. உடற்பயிற்சி, டயட் என மெனக் கெட வேண்டியிருக்கிறது.
மரபணு கண்டுபிடிப்பு...
இந்நிலையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் உடல் பருமனுக்கு காரணமான மரபணுவை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
14-3-3 ஜீட்டா...
கொழுப்பை சேகரித்து உடல் பருமனை அதிகரிக்கும் அந்த புரத மரபணு '14-3-3ஜீட்டா' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நம்பிக்கை...
இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் மருந்துகள் மற்றும் அந்த குறிப்பிட்ட மரபணுவை முடக்குவதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எலிகள் மீது சோதனை...
ஏனெனில், எலிகளின் மீது விஞ்ஞானிகள் நடத்திய சோதனையில், '14-3-3 ஜீட்டா' ஜீனை கட்டுப்படுத்துவதன் மூலம், 50 சதவீத வௌ்ளை கொழுப்பு அளவு குறைவதை கண்டறிந்துள்ளனர்.
22 சதவீத கொழுப்பு...
இந்த கொழுப்பு, உடல்பருமன், இதய நோய், நீரிழிவு போன்றவற்றுடன் தொடர்புடையது. இச்சோதனையை, அதிக உடல் எடை கொண்ட எலிகளின் மீது நடத்திய போது 22 சதவீத கொழுப்பு குறைந்துள்ளது.