ஊழல் புகாரில் இளவரசர் பதவி நீக்கம்.. 11 இளவரசர்கள் கைது.. சவுதியில் பரபரப்பு!
சவூதி அரேபியா பாதுகாப்பு படை தலைவராக இருந்த மூத்த இளவரசரை அப்பதவியில் இருந்து பட்டத்து இளவரசர் சல்மான் நீக்கிவிட்டார். 11 இளவரசர்களையும் கைது செய்து உத்தரவிட்டுள்ளார்.
ரியாத்: சவூதி அரேபியாவில் மூத்த இளவரசரை முக்கிய பதவியிலிருந்து நீக்கம் செய்த பட்டத்து இளவரசர் சல்மான், 11 இளவரசர்களையும், முன்னாள் அமைச்சர்களையும் கைது செய்தார்.
மன்னரான சல்மானின் மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக உள்ளார். அவர் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ஊழலுக்கு எதிராக இளவரசர் சல்மான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் மன்னராட்சி நடைபெறுகிறது. அந்த அரசின் முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினர் வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களின் பணத்தை சுரண்டியவர்களுக்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு கடந்த 2009-இல் ஜித்தாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளம் குறித்தும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கு சுவாச நோயால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்த விவகாரம் குறித்தும் விசாரித்து வருகிறது.
இதனிடையே அரச பரம்பரையின் மூத்த மதகுருக்கள் அடங்கிய கவுன்சில் ஒரு அறிக்கையை விட்டுள்ளது. அதில் ஊழலுக்கு எதிராக போராடுவது இஸ்லாம் மதத்தின் முக்கிய கடமை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது.
கைது வாரண்ட் பிறப்பிப்பது, பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது. வங்கிக் கணக்குகளை முடக்குவது, பணபரிமாற்றத்தைத் தடுப்பது, பணத்தை பறிமுதல் செய்வது, சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க ஊழல் தடுப்பு குழுவுக்கு முழு அதிகாரம் உண்டு என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சவூதியின் பாதுகாப்பு படையின் தலைவராக இருந்த இளவரசர் மீதேப் பின் அப்துல்லாவை அப்பதவியிலிருந்து அதிரடியாக நீக்க பட்டத்து இளவரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து 11 இளவரசர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை கைது செய்தும் சல்மான் அதிரடி காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications