செளதி மன்னருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் மறைந்த மன்னர் அப்துல்லா மகன்கள், பேரன்கள்!
ரியாத்: செளதி மன்னர் சல்மான் மற்றும் அவரது மகனும் இளைய இளவரசரான பாதுகாப்புத் துறை அமைச்சரான முகம்மது பின் சல்மானுக்கு எதிராக மறைந்த மன்னர் அப்துல்லாவின் மகன்கள், பேரன்கள் கலகக் குரல் எழுப்ப தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செளதியின் மன்னராக இருந்த அப்துல்லா மரணமடைந்ததையடுத்து அவரது ஒன்றுவிட்ட சகோதரரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல்சவூத் புதிய மன்னராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் மன்னரானதைத் தொடர்ந்து பல்வேறு பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டது.
மறைந்த அப்துல்லா அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இளவரசர் மோக்ரின் பின் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட பலர் ஓரம்கட்டப்பட்டனர். அப்துல்லாவின் மகன் இளவரசர் காலித் பின் பந்தர் வகித்து வந்த உளவுத்துறை பொறுப்பு பறிக்கப்பட்டது.
மறைந்த மன்னர் அப்துல்லாவின் மருமகன் இளவரசர் பந்தர் பின் சுல்தானிடமிருந்த மன்னருக்கான ஆலோசகர் மற்றும், தேசிய பாதுகாப்பு செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மன்னர் சல்மானின் சகோதரர் மகனான உள்துறை அமைச்சர் முகமது பின் நயீஃப் புதிய இளவரசராக அறிவிக்கப்பட்டார். மேலும் நயீஃப்புக்கு அடுத்ததாக இளைய இளவரசாக தன் மகன் முகமது பின் சல்மானை முன்னிறுத்தி செளதி பாதுகாப்புத் துறை அமைச்சராக கடந்த ஜனவரி மாதம் மன்னர் சல்மான் நியமித்தார்.
அவர் தலைமையில்தான் ஏமனில் கவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தம் நடைபெற்று வருகிறது.
புதிய மன்னர் சல்மான், மறைந்த மன்னர் அப்துல்லா குடும்பத்தினரை ஓரம் கட்டத் தொடங்கியதில் இருந்தே மன்னர் குடும்பங்களில் புகைச்சல் கிளம்பியது.
இதன் உச்சகட்டமாக செப்டம்பர் 4-ந் தேதியன்று மறைந்த மன்னர் அப்துல்லாவின் பேரன்களில் ஒருவர், 4 பக்க கடிதம் ஒன்றில் மன்னர் மற்றும் மகனின் நடவடிக்கைகள், ஓரம் கட்டுப்படுதல் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு மன்னர் குடும்பத்தினர் அனைவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், செளதி அரசாங்கத்தில் நமது குடும்பம் மெல்ல மெல்ல அதிகாரத்தை இழந்து வருகிறது. ஆகையால் மன்னர் அப்துல்லாவின் அனைத்து மகன்களும் மூத்த இளவரசர் பந்தர் முதல் இளைய இளவரசர் மோக்ரின் வரை அனைவரும் ஒன்று கூடி தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி நாட்டைக் காக்க வேண்டும்.
குறிப்பாக இளைய இளவரசராக முகம்மது பின் சல்மான் முடிசூட்டப்பட்டதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நமது பரம்பரை எதிர்காலத்தில் அதிகாரத்தை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது என்று அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தை மறைந்த மன்னர் அப்துல்லாவின் பேரன்தான் அனுப்பி உள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செளதி மன்னர் சல்மான், அவரது மகனும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான இளைய இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோருக்கு எதிரான இந்த கலகக் குரல் அரபு நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.