பாஸ்போர்ட்டைத் தர முடியாது... யுஎஸ். கோர்ட்டுக்கு சோனியா மறுப்பு
நியூயார்க்: அமெரிக்க கோர்ட்டுக்கு தனது பாஸ்போர்ட்டின் நகலைத் தர முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
1984ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸார் நடத்திய கொலை வெறித் தாக்குதல் வன்முறை தொடர்பான வழக்கு அமெரிக்க கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சோனியா காந்தி தனது பாஸ்போர்ட்டை வழக்கு சாட்சிய ஆவணமாக பதிவு செய்ய வேண்டும் என்று நியூயார்க் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதற்கு சோனியா காந்தி மறுத்து விட்டார். தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் ரகசியம் காரணமாக இப்படி தாக்கல் செய்ய இந்திய அரசு தனக்கு அனுமதி தரவில்லை என்று சோனியா காந்தி காரணம் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் நீதிபதி பிரையன் கோகன் பிறப்பித்திருந்த ஒரு உத்தரவில், ஏப்ரல் 7ம் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பாஸ்போர்ட் நகலைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பு நியூயார்க் கோர்ட்டில் சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த வழக்கில் பலமுரை சோனியா காந்தி நேரில் ஆஜராக கூறி கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனைக்கு சோனியா காந்தி சிகிச்சைக்காக வந்தபோதும் அது சம்மன் அனுப்பியிருந்தது.
1984 கலவரத்தில் தொடர்புடைய கமல்நாத், சஜ்ஜன் குமார், ஜெகதீஷ் டைட்லர் ஆகியோரை காப்பாற்ற சோனியா காந்தி முயன்று வருகிறார். எனவே அவர் மீ்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என்று கோரி சோனியா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.