சம்பளத்திற்கு பதில் பெண்களை ரேப் செய்ய ராணுவத்திற்கு அனுமதி: தெற்கு சூடானில் பயங்கரம்
சூடான்: தெற்கு சூடான் நாட்டில் ராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக அந்நாட்டு பெண்களை பலாத்காரம் செய்து கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசாங்கமே அனுமதி அளித்ததாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும் கட்சி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், தனக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக ராணுவம் கடுமையாக தண்டனை கொடுத்ததாகவும் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டது. அதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், மரங்களில் கட்டி தொங்கவிட்டும், விஷவாயு அறையில் அடைத்தும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர செயலின் உச்சக்கட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நிகழ்ந்துள்ளது.
அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை அடக்க ராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர்.
ராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக பெண்களை பலாத்காரம் செய்யலாம் என அரசாங்கமே அனுமதி அளித்ததாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது.
தெற்கு சூடானில் உள்ள 10 மாகாணங்களில் யுனைட்டி ஸ்டேட் என்ற மாகாணம் ஒன்றாகும். இந்த ஒரு மாகாணத்தில் மட்டும் 1,300 பெண்கள் ராணுவ வீரர்களால் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர் என ஐ.நா சபை புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது.
அங்கு உள்நாட்டு போர் தொடங்கியது முதல் யுனைட்டி ஸ்டேட் மாகாணத்தில் மட்டும் 10,553 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான செய்த் ராத் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.