கொலம்பஸ் தலையில் கோடாரி வெட்டு... அமெரிக்காவில் சிலை அவமதிப்பு!
டெட்ராய்ட்(யு.எஸ்): கார்கள் உற்பத்தியில் உலகத் தலைநகரமான டெட்ராய்ட் நகரில். கொலம்பஸ் சிலையின் நெத்தியில் கோடாரியால் வெட்டி ரத்தம் வழிவது போல் செய்து அவமதிப்பு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு, வங்கிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அமெரிககாவை கண்டுபிடித்ததற்காக கொலம்பஸுக்கு மரியாதை செய்யும் விதமாக இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எதிர்ப்பு தெரிவிக்கும் பழங்குடியினர்
அமெரிக்க இந்தியர்கள் என்று பொதுவாக அழைக்கப்படும், அமெரிக்கப் பழங்குடி இன மக்கள் பல ஆண்டுகளாக கொலம்பஸ் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொலம்பஸ் ஒரு கொலைகாரன், கற்பழிப்பு குற்றவாளி, மனித அடிமைகள் வியாபாரி. அவர் ஒன்றும் அமெரிக்காவை கண்டுபிடிக்க வில்லை. நாங்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வரும் இனம். அவர் ஒன்றும் புதிய தேசம் கண்டுபிடிக்க வரவில்லை. வணிக நோக்கத்துடன் வந்த வியாபாரிதான். அவர் இங்கு வந்த நாளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இன்டிஜீனஸ் மக்கள் தினம் (Indigenous People Day) கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு கொலம்பஸ் க்கு கோடாரி பரிசு
ஒவ்வொரு ஆண்டும் கொலம்பஸ் தினத்தன்று இது போன்ற எதிர்ப்புகள், ஊர்வலம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு, கொலம்பஸ் சிலையில் கோடாரியை ஒட்டவைத்து ரத்தம் வழிவது போல் பெயிண்டையும் அடித்து சிலை அவமதிப்பு நடந்துள்ளது. பிற்பகல் நான்கு மணி வரையிலும் கோடாரியுடனே கொலம்பஸ் சிலை காணப்பட்டது.
எதிர்ப்பு தெரிவிக்கும் நகரங்கள்
கொலம்பஸ் தினத்தை அனுசரிக்காமல் இண்டிஜீனஸ் தினமாக அனுசரிக்கும் முக்கிய நகரமாக சியாட்டல் விளங்குகிறது. சியாட்டல் அமைந்துள்ள வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பஸ் தினம் அனுசரிக்கப்படுவதில்லை. தெற்கு டகோட்டா மாகாணத்திலும் கொலம்பஸ் தினத்திற்கு பதிலாக பழங்குடி அமெரிக்க மக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பல்வேறு சிறிய நகரங்களும் கொலம்பஸ் தினத்தைப் புறக்கணித்து வருகின்றன. சிக்காகோ நகரில் நடைபெற்ற எதிர்ப்பு பேரணியில் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டு பழங்குடி அமெரிக்கர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
குழந்தைகளைக் கெடுக்காதீர்கள்
பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அப்பாவி பழங்குடி மக்களை கொலை செய்த கொலைகாரனை, புதிய நாட்டை கண்டுபிடித்தவராக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது சரிதானா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
கொலம்பஸ் தினத்திற்கு மாறாக இன்டிஜீனஸ் தினம் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமெரிக்கர்களிடமும் ஆதரவு பெருகிவருவது குறிப்பிடத்தக்கது.
பிரிட்ஜ்போர்ட் பள்ளிகளில் நோ கொலம்பஸ் டே!
இதற்கு சிகரம் வைத்ததுபோல், கனெக்டிகட்டில் உள்ள பிரிட்ஜ்போர்ட் நகர பள்ளிகளில் கொலம்பஸ் தினம் இனி கொண்டாடப்படாது என்றும், அங்கு பழங்குடியினர் தினம்தான் கொண்டாடப்படும் என முடிவெடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த ஆண்டை இதனை அமலுக்கும் கொண்டு வந்துவிட்டனர்.
"குழந்தைகளுக்கு பொய்யான வரலாற்றைக் கற்பிக்கக் கூடாது. உண்மையான நிகழ்வுகளை வரலாறாகக் காட்ட வேண்டும்," என்று பிரிட்ஜ்போர்ட் நகர பள்ளி வாரியத்தின் உறுப்பினர் கேட் ரிவெரா தெரிவித்தார். அவரது கருத்துக்கு மற்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-இர தினகர்