ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி; 45 பேர் படுகாயம்
டோக்கியா: ஜப்பான் நாட்டில் நேற்று இரவு நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியாகினர், 45 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கயூஷ் தீவு பகுதியில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தால், சில கட்டிடங்கள் சேதம் அடைந்தன. 19 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 45 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள செஞ்சிலுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் 30 நொடிகள் நீடித்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதேப்போன்று சிங்கப்பூரில் உள்ள வனாது தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சேத விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.