அமெரிக்க அதிபர் தேர்தல்... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டலுக்கு பேஸ்புக்கில் பெருகும் ஆதரவு
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜிண்டலுக்கு பேஸ்புக்கில் ஆதரவு பெருகிவருகிறது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பரில் நடக்கிறது. ஒபாமா 2 முறை அதிபராக பதவி வகித்துவிட்டதால் அவரால் மீண்டும் போட்டியிட முடியாது. இதனால், ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி வேட்பாளராக முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலரி கிளிண்டன் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெஃப் புஷ் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜிண்டல் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து களத்தில் குதித்தார். தற்போது லூசியானா மாகாண கவர்னராக இருக்கிறார். இவரது பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள்.
அதிபர் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பல கட்ட பிரசாரங்கள், விவாதங்கள், வாக்கெடுப்புக்கு பிறகுதான் கட்சி நிர்வாகிகளால் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தொலைக்காட்சி விவாதங்கள் நடந்து வருகிறது.
குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகும் ஆசையில் 17 பேர் உள்ளனர். இவர்களில் 44 வயதான பாபி ஜிண்டல் 13 வது இடத்தில் உள்ளார். இதனால், முதல் கட்ட தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க ஜிண்டலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதைதொடர்ந்து நேற்றுமுன்தினம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் பேச அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களில் பேஸ்புக்கில் அதிகம் பேசப்படுபவர்கள் பட்டியலில் பாபி ஜிண்டல் பெயரும் இடம்பெற்றுள்ளது.
21 லட்சம் பேர் பாபி ஜிண்டல் பெயரை 49 லட்சம் முறை குறிப்பிட்டுள்ளதாக பேஸ்புக் இணையதளம் தெரிவித்துள்ளது. ஜிண்டலுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.