ஆப்கன் நிர்வாகத்தை மாற்றிய தாலிபான்கள்.. உள்துறை அமைச்சர், நிதியமைச்சர்கள் நியமனம்
காபூல்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் அரியணை ஏறியுள்ள தாலிபான்கள், அரசின் முக்கிய பதவியிடங்களை நிரப்பத் தொடங்கியுள்ளனர்.
ஆம்.. நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவியிடங்களுக்கு நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் தாலிபான்கள்.
குல் ஆகா என்பவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சதர் இப்ராகிம், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கான் ஊடக செய்திகள் இதை தெரிவித்துள்ளன.

உளவுத்துறை, கவர்னர், மேயர் பதவியிடங்கள்
நாட்டின் உளவுத்துறை தலைவராக நஜிபுல்லா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முல்லா ஷிரின் காபூலின் புதிய கவர்னர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹம்துல்லா நோமானி காபூல் நகர மேயராக பணியாற்றுவார்.

பொது மன்னிப்பு
முன்னதாக ஆகஸ்ட் 17 அன்று, அதாவது காபூலை கைப்பற்றிய இரு நாட்களுக்கு பிறகு, தாலிபான்கள் அனைத்து ஆப்கன் அரசு அதிகாரிகளுக்கும் "பொது மன்னிப்பு" வழங்குவதாக அறிவித்தனர். "அனைவருக்கும் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது... எனவே நீங்கள் உங்கள் வழக்கமான வாழ்க்கையை முழு நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும்" என்று தாலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இயல்பு நிலை
இதனிடையே, காபூலில் உள்ள பத்திரிகையாளர்கள் கூறும் தகவல்கள்படி, காபூலில் வாழ்க்கை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறதாம். கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, போக்குவரத்து மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.

களத்தில் பத்திரிக்கையாளர்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் பிற தூதரகங்களுக்கு தாலிபான் போராளிகள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். காபூல் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்களும் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications