பிச்சை எடுத்தே ரூ10 கோடி டெபாசிட் செய்த 'கோடீஸ்வரன்' கைது- குவைத்தில் இருந்து நாடு கடத்தல்!
துபாய்: குவைத்தில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்தே ரூ10 கோடி டெபாசிட் செய்த கோடீஸ்வர பிச்சைக்காரன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
குவைத் வங்கியில் வெளிநாட்டை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் நாடு கடத்தினர்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள குவைத், பக்ரைன் ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிச்சை எடுக்க அனுமதி கிடையாது. புனித மாதமான ரமலானில் அதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் குவைத்தில் பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் தம்மிடம் எதுவும் இல்லை. பணம் தாருங்கள் என கேட்டு கொண்டிருந்தார்.
அவரை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இந்த பிச்சைக்காரர் அங்குள்ள வங்கியில் 5 லட்சம் தினார் பணம் போட்டு வைத்திருப்பது தெரியவந்தது. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ.10 கோடி ஆகும்.
இதையடுத்து பொதுமக்களை ஏமாற்றியதாக பிச்சைக்காரர் மீது குவைத் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த கோடீஸ்வர பிச்சைக்காரர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.