இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்தான்.. அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கிறது அமெரிக்கா!
ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நியூயார்க்: ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் சில நாட்டு அதிபர்களிடம் விவாதம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விரைவில் ஜெருசலேம் அதிகாரப்பூர்வமாக தலைநகர் ஆகும் வாய்ப்புள்ளது. தற்போது இந்த தகவல் சில புதிய பிரச்சனைகளை உருவாக்க இருக்கிறது.
இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கு இருக்கும் பிரச்சனையை இந்த அறிவிப்பு கிளறிவிடும். மேலும் சவுதி இந்த அறிவிப்பால் கொதிப்படைந்துள்ளது.
தலைநகர்
இஸ்ரேல் நாட்டின் தலைநகராக தற்போது ஜெருசலேம் இருக்கிறது (முன்பு டெல் அவிவ் இருந்தது). ஆனால் இது இதுவரை ஐநா அமைப்பாலோ, அமெரிக்காவாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த நாடு நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நிர்வாகரீதியாக அங்கு இதன் காரணமாக நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அங்கீகாரம்
இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.மேலும் இஸ்ரேலின் 'டெல் அவிவ்' என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்பபோவதாகவும் கூறியுள்ளார். இன்னும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே டெல் அவிவ் நகரத்தில் தூதரகம் செயல்படும் என்று கூறியுள்ளார்.
தலைவர்களுடன் பேச்சு
இதுகுறித்து அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகவிடம் பேசி இருக்கிறார். மேலும் பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸிடம் இதுகுறித்து முக்கிய விவாதம் ஒன்றையும் நடத்தி இருக்கிறார். இவர்கள் இருவரும் டிரம்ப்பின் இந்த அறிவிப்பிற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் இந்த அறிவிப்பிற்கு போதிய ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் கூறியுள்ளார்.
புதிய பிரச்சனை
தற்போது இது இஸ்ரேலில் புதிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. இதனால் அங்கு இருக்கும் முஸ்லிம் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேலில் நிறைய முஸ்லீம் மக்கள் அதிகம் கஷ்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. டிரம்ப்பின் இந்த முடிவுக்கு சவூதி அரசர் சல்மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது இஸ்ரேலில் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.