அமெரிக்க ஆசிரியையை கொடூரமாக கொன்ற அல்-கொய்தா பெண்ணுக்கு மரண தண்டனை
அபுதாபி: அபுதாபியில் அமெரிக்க பள்ளிக்கூட ஆசிரியை ஒருவரைக் கொலை செய்த பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் இபோல்யா ரியான். இவர் அபுதாபியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அபுதாபி அல்ரீம் தீவில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்ற இவர் அங்குள்ள கழிவறை அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கழிவறை பகுதியில் இருந்து ஒரு பெண் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அபுதாபியில் ஹாலிதியா என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் வாசலில் வெடிகுண்டு பார்சல் வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் வசித்த தம்பதியை கொலை செய்யும் நோக்குடன் வைத்த வெடிகுண்டை போலீசார் செயல் இழக்க செய்தனர்.
அந்த குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில் ஒரு பெண் வெடிகுண்டை வைத்து விட்டு காரில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. வணிக வளாக கண்காணிப்பு கேமராவிலும், குடியிருப்பு பகுதி கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்த பெண் ஒரே மாதிரி இருந்தது தெரியவந்தது. எனவே 2 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே பெண் தான் என போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணை தேடிய போது அபுதாபியில் ஒரு வீட்டில் இருந்தது கண்டறிந்து அங்கு சென்று அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் ஏமனை சேர்ந்த அலா பத்தர் என தெரியவந்தது. மேலும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு அலா பத்தர் அடிக்கடி பணம் அனுப்பியதற்கான ஆதாரங்களும் சிக்கின. இவருடைய கணவர் அல்கொய்தா இயக்கத்திற்கு பணம் அனுப்பி உதவி செய்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கு தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.