கென்யா வெஸ்ட்கேட் தாக்குதலுக்கு பின் மோஸ்ட் வாண்டட் 'ஒயிட் விடோ' உள்ளாரா?
நைரோபி: கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மால் தாக்குதலுக்குப் பின்னால் இங்கிலாந்தால் தேடப்பட்டு வரும் சமந்தா லூத்வெய்ட் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு புகுந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 இந்தியர்கள் உள்பட 68 பேர் பலியாகினர். மாலுக்குள் இருந்த சில மக்களை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
இன்று தொடர்ந்து 4வது நாளாக மாலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்தது. மாலுக்குள் இருந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இங்கலாந்தால் தேடப்பட்டு வரும் விதவை பெண்ணான சமந்தா லூத்வெய்ட்(29) தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மாலுக்குள் இருந்த சமந்தா பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் இறந்துவிட்டாராம். இறந்த தீவிரவாதிகளின் உடல்களில் சமந்தாவின் உடலை அடையாளம் காண முயற்சி நடந்து வருகிறது.
அயர்லாந்தில் பிறந்த சமந்தாவை வெள்ளை விதவை என்று அழைக்கின்றனர். அவரது கணவர் ஜெர்மைன் லின்ட்சே கடந்த 2005ம் ஆண்டு லண்டனில் பஸ் மற்றும் 3 டியூப் ரயில்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி 52 பேர் பலியாக காரணமாக இருந்தார். சமந்தா தனது இளம் வயதில் இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். ஜெர்மைன் இறந்த பிறகு ஹபீப் கனி என்பவரை மறுபடியும் மணந்துள்ளார்.
அல் கொய்தாவில் சேர்ந்த சமந்தா கடந்த 2 ஆண்டுகளாக போலீசார் கையில் சிக்காமல் நழுவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.