"மின்நைட் ஆப்ரேஷன்.." நள்ளிரவில் வீடு வீடாக சென்று துரோகிகளை பிடிக்கும் ராணுவம்! பதறும் பொதுமக்கள்
கீவ்: உக்ரைன் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தாலும் கூட இன்னுமே இது முடிவுக்கு வரவில்லை. இப்போது கடந்த சில வாரங்களாக இது ரஷ்யாவுக்கு புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்தாண்டு தொடக்கம் முதலே ஏகப்பட்ட சிக்கல்தான். ஒரு புறம் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை ரஷ்யா மறுத்தாலும் கூட, இதுதான் உண்மை என்று சர்வதேச ஊடகங்கள் கூறி வருகின்றனர்.
மறுபுறம் உக்ரைன் போரிலும் சிக்கல் மேல் சிக்கல் தான். கடந்த பிப். மாதம் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென உக்ரைன் போரை ஆரம்பித்தார் புதின். முதலில் சில மாதங்களில் இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர்.

ரஷ்யா
இருந்த போதிலும், பல மாதங்களைக் கடந்தும் கூட போர் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல பகுதிகளிலும் உக்ரைன் வீரர்கள் ரஷ்யா ராணுவத்திற்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். அதிலும் கடைசி சில வாரங்கள் உக்ரைன் கைகளே ஓங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போரின் தொடக்கத்தில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களைக் கூட ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. இப்போது போரை முடித்தால் அது தனக்கு அவமானம் என்பதாலேயே புதின் போரைத் தொடர்ந்து வருகிறார்.

கெர்சன்
அப்படித்தான் தெற்கு உக்ரைன் நகரமான கெர்சன் இருந்து ரஷ்ய ராணுவம் சில வாரங்களுக்கு முன்பு பின்வாங்கியது. இப்போது கெர்சன் நகரம் முழுக்க முழுக்க உக்ரைன் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இப்போது உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் நகரையும் மேற்கே கிழக்கே இருக்கும் ரஷ்யப் படைகளையும் டினிப்ரோ ஆறு தான் பிரிக்கிறது. இதன் காரணமாக ஆற்றின் அந்தப் பக்கம் இருந்து வரும் நபர்களை உக்ரைன் படைகள் உற்றுக் கவனித்து வருகிறது. ஆற்றைக் கடந்து இருந்து வருவார்களைத் தனியாகப் பிடித்து விசாரணை செய்து வருகிறது.

வீடு வீடாக
இது மட்டுமின்றி கெர்சன் நகரம் சில மாதங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அவர்களுக்கு உதவியவர்களையும் தேடிப் பிடிக்கும் முயற்சியில் உக்ரைன் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் உக்ரைன் ராணுவம் அவர்களின் வீடுகளைச் சோதனையிடுகின்றன. மேலும், அவர்களிடம் இருக்கும் ஆவணங்களைச் சரிபார்த்து வருகிறது. கெர்சன் முழுக்க வசிக்கும் அத்தனை பேரிடமும் இப்படி விரிவான சோதனையை உக்ரைன் ராணுவம் நடத்துகிறது. சந்தேகப்படும் நபர்களைத் தனியாகவும் பிடித்து வைத்துள்ளது.

துரோகிகள்
இது தொடர்பாக உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "இங்குள்ள அனைவரையும் சோதனை செய்து வருகிறோம். அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து வருகிறோம். இப்போது இங்கிருக்கும் அனைவரையும் எங்களுக்குத் தெரியும். அந்தளவுக்குத் தீவிரமாகச் சோதனை நடத்தி வருகிறோம். துரோகிகள் அத்தனை பேரையும் நிச்சயம் பிடிக்கும். ரஷ்யாவுக்கு உதவிய துரோகிகளுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும்" என்றார்.

ரஷ்யாவுடன் தொடர்பு
உக்ரைன் போர் தொடங்கிய சில வாரங்களில் ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய முக்கிய நகரங்களில் ஒன்று தான் இந்த கெர்சன். சுமார் 8 மாதங்களாக ரஷ்யப் படைகள் கட்டுப்பாட்டில் இந்த நகரம் இருந்த நிலையில், இப்போது தான் மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ரஷ்யாவிடம் இந்த நகரம் இருந்த போது, இங்குள்ள சிலரே ரஷ்யாவுக்கு ஆதரவாக உதவியுள்ளனர். இன்னுமே கூட சிலர் ரஷ்ய ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் ரஷ்யாவுக்கு முக்கிய தகவல்களை அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. அவர்களைத் தான் பிடித்து வேட்டையாடி வருகிறது உக்ரைன் ராணுவம்!

மக்களிடம் உதவி கேட்ட ராணுவம்
உக்ரைன் ராணுவம் இந்தப் பகுதியைக் கைப்பற்றிய உடனேயே ரஷ்ய ஆதரவு பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும், உக்ரைன் ராணுவத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டன. அது மட்டுமின்றி துரோகிகளைப் பிடிக்கவும் உதவுமாறு பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ரஷ்யாவுக்கு உதவியவர்கள் குறித்த தகவல்களைக் கொடுக்கலாம் என்று கூறி இறகெனத் தனியாக க்யூர் கோடையும் கொடுத்துள்ளனர். இப்படி உக்ரைன் எடுக்கும் தீவிர நடவடிக்கையில் மிரண்டு போயுள்ளனர் அந்நகரில் வசிக்கும் மக்கள்.












Click it and Unblock the Notifications